• June 3, 2025
  • NewsEditor
  • 0

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4′ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது.

ஆக்ஸியம் மிஷன் 4 திட்டத்தின் படி, மே 29ம் தேதி புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸ்-4 குழுவினர் வரும் ஜூன் மாதம் 8 தேதி விண்வெளி பயணம் மேற்கொள்வார்கள் என முன்னரே கூறப்பட்டிருந்தது.

அதன்படி ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை காலை 9:11 மணிக்கு முன்னதாகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆக்ஸ்-4 குழுவினர் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டு 14 நாட்கள் வரை சுற்றுப்பாதை ஆய்வகத்தில் செலவிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய பைலட்டாக இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியான சுபன்ஷு சுக்லா இருப்பார் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த ராகேஷ் ஷர்மா சோவியத் விண்கலமான சோயுஸ் டி-11இல் விண்வெளிக்குப் பயணித்தார். அவருக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லப்போகும் இரண்டாவது இந்தியரும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லப்போகும் முதல் இந்தியரும் சுபான்ஷு சுக்லா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நிகழவுள்ள இந்த விண்வெளி பயணம் உலக அரங்கில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

யார் இந்த சுபான்ஷு சுக்லா?

சுபான்ஷு சுக்லா இந்திய விமானப் படையின் விமானி என்பது பலருக்கும் தெரியும், ஆனால் இவர் ஒரு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றிருக்கிறார்.

சுபான்ஷு சுக்லா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் (IISc) ஆய்வுக் கட்டுரைகளின் இணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

பீம் (BHEEM) எனப் பெயரிடப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, அதில், வேற்றுக்கிரகங்களில் மாதிரி வாழ்விடத்தை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள தயாராக உள்ளார் சுபான்ஷு சுக்லா.

ஆக்ஸியம் 4 திட்டத்தில் சுபான்ஷு பங்கேற்பது இந்தியாவிற்கு ஒரு மைல்கல்லாக மட்டுமின்றி, இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருக்கும் ககன்யான் திட்டத்திற்கும் சுபான்ஷுவின் இந்தப் பயணம் முக்கியமானதாக இருக்கும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *