
கோவை, சிங்காநல்லூர் திருச்சி சாலையில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனை மையம் உள்ளது.
அங்குப் பணியாற்றி வரும் சரவணக்குமார் என்ற ஊழியர், கார்களை ஆய்வு செய்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ஒரு கார் மாயமானது தெரியவந்தது.
உடனடியாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் காரை திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபரைப் பிடிப்பதற்காகத் தனிப்படையும் அமைக்கப்பட்டது.
காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அந்த நபர் விற்பனை மையத்தின் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தன் பைக்கை நிறுத்திச் சென்றது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையினர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம், “இந்த பைக்கை யாராவது எடுக்க வந்தால் எங்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

நேற்று மாலை அந்த நபர் பெட்ரோல் பங்குக்கு பைக் எடுக்க வந்துள்ளார். பங்க் ஊழியர்கள் அவரைப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதில் அந்த நபர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கந்து கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்று தெரிந்தது.
அவர் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நிலையில், கடந்த வாரம் டாடா விற்பனை மையம் சென்று TATA Curvv மின்சார வாகனம் வாங்குவது போல விசாரித்துள்ளார்.
அந்த காரை ஓட்டிப் பார்த்து விரைவில் வாங்குவதாகக் கூறியுள்ளார். காரின் மதிப்பு ரூ.20 லட்சமாகும். அதை வாங்குவதற்கான பணம் இல்லை.

இதனால் காரை திருட முயற்சி செய்து, விற்பனை மையம் வந்து காரை பார்த்தார். அதில் சாவியும் இருந்தது. அவர் ஏற்கனவே கார் குறித்து விசாரித்துச் சென்றதால் அங்கிருந்தவர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கர்ணன், காரை திருடிச் சென்றுள்ளார்.