
சென்னை, திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோயிலில் பார்வை மாற்றுத்திறனாளி பெண் பிரியவதானாவுக்கு ஓதுவார் பணிக்கான நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதைத் தொடர்ந்த அவர் கோயிலில் பாடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. எனவே, பிரியவதானா குறித்து அறிந்துகொள்ள அணுகினோம்.
சுரேஷ் – சுபாஷினி தம்பதிக்குச் சொந்த ஊர் சென்னை ராணிப்பேட்டை. இவர்களுக்கு பிரியவதனா மற்றும் யோகின் என இரண்டு பிள்ளைகள்.
இதில் மூத்தவர்தான் பிரியவதானா (24). குறை மாதத்தில் பிறந்ததால் அவருக்கு எல்லாமே தாமதமாகவே நடந்திருக்கின்றன.
சரியான வயதில் நடப்பது, பார்ப்பது, கேட்பது போன்றவற்றில் சாதாரண மனிதர்கள் செய்யும் எல்லாவற்றையும் பெரும் சிரமத்துக்குப் பின்பே பெற்றிருக்கிறார்.
இது தொடர்பாக பிரியவதானாவின் அம்மா சுபாஷினி பேசியபோது, “பிரியவதனா சிறு வயதிலேயே பார்வையும் இழந்தார். சரியான வயதில் அவரால் எழுந்து நடக்கவும் முடியவில்லை. இவையெல்லாம் எங்களுக்கு மிகப் பெரும் கவலையாக இருந்தது.
கடவுள் புண்ணியத்தில் கொஞ்சம் கொஞ்சமாக டிவி சத்தம் கேட்டால் அதன் அருகில் அமர, நடக்க ஆரம்பித்தார். அந்தச் சத்தத்தைக் கேட்டு அப்படியே முணுமுணுக்கத் தொடங்கினார்.
இதைப் பார்த்த போது எங்களுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷம். ஏதோ பேசுகிறாளே அதுவே போதும் எனத் தோன்றியது.
அப்படியே பிரியவதனா சாப்பிடும்போது, “குரு பிரம்மா, குரு விஷ்ணு” எனச் சொல்லி, சொல்லி சாப்பாடு ஊட்டிவிடுவேன். அதை அப்படியே ராகமாகப் பாடிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தார். அப்போதுதான் எங்கள் மகளுக்கு இசையின் மீது உள்ள ஆர்வத்தை ரசிக்கத் தொடங்கினோம்.
சிறு வயதிலேயே ராகம் அமைத்து அருமையாகப் பாடுவார். பள்ளிப் படிப்பை முடித்ததும், அடையாற்றில் இருக்கும் இசைக் கல்லூரியில் மூன்று வருடம் இசைப் பயிற்சி பெற்றார்.
பல அரங்கங்களில் பாடி, இசைக் கலைமணி விருதையும் வாங்கியிருக்கிறார். என் மகளை நினைத்து அப்போதெல்லாம் அழாத நாள்களே இல்லை. இப்போது என் மகள் தமிழ்நாட்டின் முதல் பார்வையற்ற ஓதுவார் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
என் மகளின் இத்தனைக் கால பயணத்தில் நான் அவளுடன் இருந்தேன். அவளுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பாடத் தெரியும். ஆனால், அவளால் சாதாரண மனிதரைப் போலப் பேச முடியாது. ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை பயிற்சி செய்வாள்.
அவளுக்கு வார்த்தைகள் மட்டுமே தெரியும். அது எந்த மொழி என்று தெரியாது. அவளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால், முதலில் நான் அதைக் கற்றிருக்க வேண்டும்.
எப்போதும் இசையுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவாள். அவளைச் சுற்றி இசை எப்போதும் இருக்க வேண்டும்.

இவ்வளவு காலம் அவளுக்காகவே இருந்தேன். நான் பழைய வீட்டில் இருக்கும் போதெல்லாம் என் மகள் பாடிக்கொண்டே இருப்பதால் வீட்டைக் காலி செய்ய வைத்தார்கள். ஆனால் இன்று, கடவுளுக்கு நிகராக ஓதுவாராகப் பணியாற்றும் வாய்ப்பு என் மகளுக்குக் கிடைத்துள்ளது. அதற்கு கடவுளுக்கு நன்றி. கடந்த ஆண்டு, சூப்பர் சிங்கர் 5-வது சீசனில் பாடினார். 5வது சுற்றில் வெளியேறிவிட்டோம்.
இப்போது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் என் மகளுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு, திருவான்மியூரில் உள்ள பாம்பன் குமரகுருபர சுவாமிகள் கோயிலில் பணியாற்றி வருகிறார். என் மகள் 300 பாடல்களை ஒரே நேரத்தில் பாடும் வல்லமை பெற்றவர்” எனப் பெருமை பொங்கப் பேசி முடித்தார்.