
‘2026 இல் இந்த திமுக அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.’ என தவெக சார்பில் சி.டி.ஆர், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் என மாறி மாறி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்த கையோடு 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வையும் விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். ஜனநாயகன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில், விஜய்யின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.
‘கிடப்பில் போடப்பட்ட மா.செக்கள் அறிவிப்பு!’
மாதம் ஒரு அரசியல் நிகழ்வை நடத்தி பேசுபொருளாகி பின் சீனிலேயே இல்லாமல் மறைந்துவிடும் விஜய் கூடவே சேர்த்து இன்னொரு விஷயத்தையும் மறந்துவிட்டார். கட்சிரீதியாக 120 மாவட்டங்களைப் பிரிக்கிறோம் எனக் கூறியிருந்தார். அப்படி பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்களில் 114 மாவட்டங்களுக்கான மா.செக்களை மட்டுமே அறிவித்தார். ஒவ்வொரு கட்டத்துக்கும் 19 மா.செக்கள் என 6 கட்டங்களாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து அறிவிப்பை வெளியிட்டார்.

கடைசியாக மார்ச் 13 ஆம் தேதி 6 ஆம் கட்டமாக நிர்வாகிகளை சந்தித்திருந்தார். அதன்பிறகு எஞ்சியிருக்கும் மா.செக்கள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இன்னும் 6 மா.செக்களை அறிவிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட மா.செக்களில் திருநெல்வேலியை சேர்ந்த மா.செ ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அவருக்குப் பதிலாகவும் யாரையும் இன்னும் அறிவிக்கவில்லை. இடையில் இன்னொரு முடிவில் வேறு இருந்தனர். அதாவது சில இடங்களில் குழப்பம் நீடிப்பதால் இன்னும் கூடுதலாக 10-15 மா.செக்களை நியமிக்கும் வகையில் மாவட்டங்களை பிரிக்கலாம் எனும் முடிவில் இருந்தனர். ஆனால், அந்த மார்ச் 13 க்குப் பிறகு இது சம்பந்தமாக எந்த அப்டேட்டும் இல்லை. எஞ்சியிருக்கும் மா.செக்கள் அறிவிப்பை அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார் விஜய்.
தூத்துக்குடி, தென்காசி, சென்னை துறைமுகம், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு இன்னும் நிர்வாகிகளை அறிவிக்க வேண்டும். எல்லா பக்கத்திலுமே எதோ ஒரு முட்டுக்கட்டை இருப்பதாக கூறுகின்றனர். பல கோஷ்டிகளின் மோதலால் உட்கட்சி பூசலால் ஆரம்பத்திலிருந்தே புகைந்து வந்த தூத்துக்குடி தவெக, இன்னமும் அப்படியேத்தான் இருக்கிறது.

இதுசம்பந்தமாக பனையூர் தரப்பில் விசாரிக்கையில், ‘எஞ்சியிருக்கும் சில மாவட்டங்களில் பிரச்சனைகளும் குழப்பங்களும் இருந்தது உண்மைதான். ஆனால், ஆனந்த் அண்ணன் எல்லாரையும் அழைத்துப் பேசி பஞ்சாயத்துகளை சுமூகமாக முடித்துவிட்டார். எஞ்சியிருக்கும் மா.செக்களின் பட்டியல் கூட கையில் ரெடியாக இருக்கிறது. அறிவிப்பு வராவிட்டாலும் சில மாவட்டங்களில் நிர்வாகிகளை இறங்கி வேலை பாருங்கள் என ஆனந்த் அண்ணன் வாய்மொழியாக உத்தரவு இட்டுவிட்டார்.’ என்கின்றனர்.
ரெடியாக இருக்கும் லிஸ்ட்டை அறிவிப்பதில் என்ன தாமதம் என புரியவில்லை.
‘விஜய் தன்னுடைய கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பிலும் அதுசம்பந்தமான பணிகளிலும் பிஸியாக இருந்தார். பொதுக்குழு, ஆண்டு விழா போன்றவற்றை நடத்தியே ஆக வேண்டும் என்பதால்தான், நேரமில்லையென்றாலும் நெருக்கடிக்கு இடையே நடத்தினார். இப்போது சூட்டிங் எல்லாம் முடிந்திருப்பதாக தெரிகிறது. இனி முழுக்க முழுக்க அரசியல்தான்.’ என்கிறது இன்னொரு தரப்பு.

மேலும், ஜூலை மாதத்திலிருந்து விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கும் திட்டமிட்டிருக்கிறார்களாம். ‘மண்டலம் மண்டலமாக பிரித்து ஜூலையிலிருந்து மொத்தம் 120 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஒரு திட்டத்தை தலைவரிடம் கொடுத்திருக்கிறோம். அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ரெக்கார்ட் கொண்ட மத்திய மண்டலத்தின் திருச்சியிலிருந்தோ அல்லது தென் மண்டலத்தில் மதுரையிலிருந்தோ சுற்றுப்பயணத்தை தொடங்குவதுதான் ப்ளான். அந்த சுற்றுப்பயணத்துக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்துதான் அடுத்தக்கட்ட பிரசார யுக்திகளும் கூட்டணி சம்பந்தமான விவகாரங்களையும் தீர்மானிக்கும் முடிவில் இருக்கிறோம்.’ என்கின்றனர் விஜய்க்கு நெருக்கமான இன்னொரு தரப்பினர்.