புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், “போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புதுச்சேரி வழியாக சென்னை, மகாபலிபுரம், கடலூர் ரயில் வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.52.13 கோடி ஒதுக்கியிருந்தது.
ஆனால் அதன் ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்குப் புதுச்சேரி அரசு சரியாக ஒத்துழைக்கவில்லை.
அதனால் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அப்படியே ரயில்வே வாரியத்திடம் ஒப்படைத்திருக்கிறது தெற்கு ரெயில்வே நிர்வாகம். மக்களின் பல ஆண்டு கோரிக்கையான இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த புதுச்சேரி ஆளுநரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்திருக்கிறார். அதனால் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும்.
புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தியிருக்கிறது. நுகர்வோர் தலையில் விலையைச் சுமத்தியிருக்கும் அரசின் மதுபானக் கொள்கையில் மாற்றம் வர வேண்டும்.
புதுச்சேரியில் அரசே மதுபானங்களைக் கொள்முதல் செய்து கொடுத்தால், அரசுக்கு ரூ.1,500 கோடி வருவாய் கிடைக்கும். இதுகுறித்து ஆளுநரிடம் அ.தி.மு.க பலமுறை எடுத்துக் கூறியும், அவர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
மதுபானக் கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைப்பது போல, ஆளுநரும் நினைக்கிறாரா ? இதில் அவரது நிலைப்பாடு என்ன? உண்மையிலேயே அவருக்கு மாநில நலன் மீது அக்கறை இருந்தால், புதுச்சேரியில் மதுபானக் கொள்முதல் கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.