
ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி இன்று அஹமதாபாத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், நேற்று போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. ரஜத் பட்டிதர், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியிருந்தனர். அதில் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் பேசிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே.
‘ரஜத் பட்டிதர் – பத்திரிகையாளர் சந்திப்பு!’
ரஜத் பட்டிதர் பேசியதாவது, ‘ஆர்சிபி மாதிரியான ஒரு அணியை வழிநடத்தும் போது எதிர்பார்ப்புகளை தவிர்க்க முடியாது. ஆனால், நான் நம்முடைய கட்டுப்பாட்டில் என்னென்ன விஷயங்கள் இருக்கிறது என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஒரு கேப்டனாக நான் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். தலைசிறந்த வீரர்களுடன் பயணித்தது என்னுடைய அணுகுமுறையில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
ட்ரெஸ்ஸிங் ரூமில் நிதானமான மற்றும் வீரர்களுக்கு அணியில் அவர்களின் இடத்துக்கு எந்த பதற்றமும் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்றே நினைத்தேன். இது இறுதிப்போட்டி என பெரிதாக அழுத்தம் ஏற்றிக் கொள்ள விரும்பவில்லை. எங்களின் சிறந்த கிரிக்கெட்டை இங்கேயும் ஆட வேண்டும். விராட் கோலி இந்த அணிக்காக நிறைய செய்திருக்கிறார்.

அவருக்காகவும் எங்களின் ரசிகர்களுக்காகவும் வென்றால் அது ஒரு ஸ்பெசலான விஷயமாகத்தான் இருக்கும். சையத் முஷ்தாக் அலி டிராபியில் நானும் ஸ்ரேயாஸூம் இறுதிப்போட்டியில் மோதியிருந்தோம். இப்போது மீண்டும் மோதப்போகிறோம். இது வேறு மாதிரியான சவால்களை உள்ளடக்கிய போட்டியாக இருக்கும். டிம் டேவிட்டின் உடற்தகுதி பற்றி இன்னும் அப்டேட் கிடைக்கவில்லை. அவர் ஆடுவாரா மாட்டாரா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.’ என்றார்.