
“எங்கள் உயிருக்கும் மேலான தலைவர் எடப்பாடியாரை பற்றி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆணவமாக பேசிய ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை செய்கிறோம்..” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆர்.பி.உதயகுமார் அறிக்கை
இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு நாள்களாக அவதிப்பட்ட மதுரை மக்கள் இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். திரும்பி திசையெல்லாம் போக்குவரத்து நெரிசலால் மதுரை ஸதம்பித்தது. திமுக அரசு மீது மக்களுக்கு இருக்கிற எதிர்ப்பு அலையை திசை திருப்ப முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது.
பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக் என்ற திரைப்பட காமெடிபோல ஸ்டாலின் பேச்சு ஸ்ட்ராங்காக இருக்கிறது, ஆனால் செயல் வீக்காக இருக்கிறது. ஸ்டாலினுக்கு எப்போதும் எடப்பாடியார் பற்றிய நினைவுதான் உள்ளது. அதனால்தான் மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடியாரை பற்றி பேசி உள்ளார்.
ஆணவத்தின் உச்சத்தில், நம்பிக்கை இழந்து, அதீத கற்பனையில், அரசியல் நாகரிகமின்றி பேசி இருக்கிறார். மதுரையில் இருந்து நாங்கள் இதை எப்படி கேட்டுக் கொண்டிருப்பது.
`ஒரு விவசாயியின் மகன்’
முதலமைச்சராக உள்ள ஸ்டாலின், முதலமைச்சரின் மகனாக பிறந்து இப்பதவியில் அமர்ந்து உள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயியின் மகன். 50 ஆண்டுகால மக்கள் சேவையால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அருளாசியாலும் மக்கள் ஆதரவாலும் பல சாதனைகளை படைத்துள்ளார் .
நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை தூண்டி விட்டீர்கள், அவதூறுகளை பரப்பினீர்கள். அனைத்தையும் சிரித்துக்கொண்டே எடப்பாடியார் முறியடித்தார். இன்றைக்கும் எப்போதும் எடப்பாடி பழனிசாமி பற்றியே நினைக்கிறீர்கள்.

மக்கள் செல்வாக்கு
அவருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதால் ஏற்பட்ட பொறாமை உங்கள் பேச்சில் வெளிப்படுகிறது. ஒரு விவசாயி மகனாக பிறந்து, முதல்வராக சரித்திர சாதனைகளை செய்துள்ளார்.
பல்வேறு திட்டங்களை செய்தார். ஆனால் இதையெல்லாம் நீங்கள் செய்யத் தவறியதால் மக்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அந்த எதிர்ப்பு அலையை மடைமாற்றம் செய்யும் வகையில் வார்த்தை ஜாலத்தால் நீங்கள் பேச்சிய பேச்சு பத்திரிகை தொலைக்காட்சிகளில் வந்துள்ளது.
கருணாநிதி, திமுக, கருப்பு சிவப்பு கொடி ,உதயசூரியன், அண்ணா அறிவாலயத்தை நீங்கள் உயிராக நினைக்கலாம். ஆனால் எங்கள் உயிருக்கு மேலான எம்ஜிஆர், ஜெயலலிதா வடிவமாக உள்ள எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்து பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
திமுக-வின் தீர்மானங்கள்
திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்களை போட்டீர்கள், அதில் கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்த நீங்களே மக்களை ஏமாற்று வகையில் தீர்மானம் போடுகிறீர்கள். அதிமுக கூட்டணி பற்றி விமர்சித்துள்ளீர்கள் உங்கள் சுயரூபம், குடும்ப அரசியல்,சர்வாதிகாரம் பற்றி எடப்பாடியார் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வருகிறார்.
ஏழாவது முறையாக திமுக வெற்றி பெறும் திராவிடர் மாடல் தொடரும் என்று மமதையுடன் பேசவில்லை என்று கூறிவிட்டு ஆணவத்துடன் பேசி உள்ளீர்கள். உங்கள் கட்சி பொதுக்குழுவில் எதிர்க்கட்சியாக ஜனநாயக கடமை ஆற்றும் எடப்பாடியாரை பற்றி விமர்சிப்பது எங்களைப் போன்ற சாமானிய தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

`குறைத்து மதிப்பிடுகிறீர்கள்..’
அதிமுக-பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசாமல் பவ்யமாக பக்கத்திலே உட்கார்ந்து இருந்தார், என்ன ஒரு அடக்கம் என்று ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு இன்றைக்கு எடப்பாடியார் என்ன செய்தார்? ஏன் செய்தார்? என்பதை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து வருகிறார்.
எடப்பாடி பழனிசாமியை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அப்படி மதிப்பிட்டவர்கள் யாரும் அவரை வென்றதில்லை. எடப்பாடியாரை பற்றி நீங்கள் பேசியது கடும் கண்டனத்திற்குரியது. எடப்பாடியாரை பற்றிய உங்கள் பேச்சுக்கு மதுரை மக்கள் பொறுத்துக் கொள்ள முடியாத வேதனையில் இருக்கிறார்கள், தொடர்ந்து இதுபோன்று ஆணவமாக, அகம்பாவமாக பேசினால் எடப்பாடி பழனிசாமியின் அனுமதி பெற்று நாங்கள் போராடுவோம் என எச்சரிக்கை விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.