
வாக்கிங் செல்லும்போது… இப்படி நடக்க வேண்டும்!
ஒரு நாள் நானும் தோழியும் பார்க்கில் வாக்கிங் சென்றபோது, அவள் இடது வலமாக (clockwise) வாக்கிங் செல்லாமல், வலது இடமாக (anti clockwise) சென்றாள். நான் ஏன் என்று கேட்டபோது, ‘தோணின திசையில நடக்குறேன். ஏன், நடக்கக் கூடாதா?’ என்றாள். ’பலரும் செய்யும் தவறு இது. இடது வலமாகச் செல்வதுதான் முறை என்பதால், பெரும்பான்மையானவர்கள் அப்படிச் செல்லும்போது, உன்னைப் போல் சிலர் மட்டும் இப்படி மாறி நடந்தால் எதிரே வருபவருக்கும், ஏன் உனக்கும்கூட அது தொந்தரவாக இருக்கும். அப்போது அங்கேயும், இங்கேயும் என நகர வேண்டியிருக்கும். அதுவே, எல்லோரும் ஒரே போல சென்றால் இந்தப் பிரச்னை இருக்காது அல்லவா?’ என்றேன். ஆமோதித்தாள்.
– தேன்மொழிராஜா, நெய்வேலி

பில் இருந்தால்… இழப்பீடு பெறலாம்!
பலரும் ஃபார்மஸி, மளிகை, உணவகம் எனத் தாங்கள் வாங்கும் ரசீதுகளை அங்கேயே தூக்கி எறிந்துவிட்டு வருகிறார்கள். வீட்டுக்கு எடுத்து வந்தாலும் உடனடியாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்கள். சில நேரங்களில் இந்தப் பொருள்களால் அலர்ஜி, ஃபுட் பாய்சன் என உடல்நலக் குறைவு ஏற்பட நேர்ந்தால், நாம் நுகர்வோர் நீதிமன்றத்துக்குச் சென்று இழப்பீடு பெற வாய்ப்புண்டு. அதற்கு, ரசீது அவசியம். எனவே, இதுபோன்ற ரசீதுகளை அந்தப் பொருள்களை உபயோகிக்கும் வரையாவது வைத்திருக்கலாமே?
– வெண்பா, சிதம்பரம்

மாத்திரை, மறதி… தீர்வு!
இதய நோயாளியான என் தாத்தாவுக்கு மறதி அதிகம். அவர் தினமும் மூன்று வேளைகளும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘ஒவ்வொரு வேளையும், இந்த வேளைக்கு நாம மாத்திரை சாப்பிட்டோமா, இல்லையானு மறந்து போயிடுது. சில நேரம், இதனால ரெண்டு தடவை மாத்திரை போட்டுடுறேன்’ என்று புலம்பினார். அவருக்கு நான், தினமும் மூன்று வேளைகளுக்கும் பிரித்துப் போட்டு வைத்துக்கொள்ளும் ‘டேப்லட் ஆர்கனைஸர்’ (Tablet Organiser) வாங்கிக் கொடுத்ததில் இருந்து அவருக்கு இந்தப் பிரச்னை இல்லை. தினமும், அந்தந்த நாள், வேளைக்குள்ள மாத்திரையை குழப்பமில்லாமல் எடுத்துச் சாப்பிட்டுவிடுகிறார். முதியோர் இருக்கும் வீடுகளில் கவனிக்க!
– இமாரா ஷான்ஸே, சென்னை-126

சொல்லிவிட்டுச் செல்லலாமே..!
தகவல் பரிமாற்றம் விரல் நுனிக்கு வந்துவிட்ட இன்றைய சூழலிலும், பத்திரிகை வைக்க, விசேஷம் சொல்ல வருபவர்கள் சிலர், உரியவர்களுக்கு போன் செய்து, அவர்கள் வீட்டில் இருக்கிறார்களா என்று உறுதி செய்து கொண்டு வராமல் நேரடியாக வருகிறார்கள். ஒருவேளை அவர்கள் வீட்டில் இல்லை என்றால், அவர்களை போனில் அழைக்கிறார்கள். வீட்டினர் அருகில் எங்காவது சென்றிருந் தால், காத்திருக்கும் இவர்களுக்காக அவசரமாகத் திரும்பு கிறார்கள். அவர்கள் வரமுடியாத தொலைவில் இருந்தால், அழைப்பாளர்கள் பத்திரிகையை வீட்டு வாசலில் வைத்து விட்டுச் செல்கிறார்கள். எதற்கு இத்தனை அசௌகர்யங்கள்? வரும் முன் ஒரு போன் செய்துவிட்டால்… எல்லாம் சுமுகமாக நடக்குமே!
– எம்.வசந்தா, சென்னை-64