
சேலம்: காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 3,352 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 112.60 அடியாக உயர்ந்துள்ளது.
தென் மேற்குப் பருவமழை தொடங்கி விட்ட நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நாட்களில் கனமழை பெய்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த 10 நாட்களாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கடந்த 31-ம் தேதி அன்று விநாடிக்கு 2,913 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,017 கனஅடியாக அதிகரித்தது. இன்று விநாடிக்கு 3,352 கனஅடியாக மேலும் அதிகரித்தது.