
ஜோலார்பேட்டை: விற்பனை வரி செலுத்தாமல் ரயிலில் கொண்டுவரப்பட்ட 71 கிலோ வெள்ளியை ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூன் 2) பறிமுதல் செய்தனர். பிறகு, வெள்ளிக்கான வரியை செலுத்திய உடன் மீண்டும் உரியவர்களிடம் வெள்ளிக்கட்டிகள் ஒப்படைக்கப்பட்டன.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் தனது நண்பர் செந்தில் என்பவருடன் இணைந்து சேலத்தில் வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறார். நண்பர்கள் இருவரும் தங்களது வெள்ளிப் பட்டறையில் செய்யும் ஆபரணங்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியில் ஆபரண பொருட்கள் செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் இருந்து 71 கிலோ வெள்ளி கட்டிகளை ரயில் மூலம் இன்று (ஜூன் 2) கொண்டு வந்தனர்.