
“மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசியவர், “முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது சகஜம். மதுரையில் முதல்வர் வருகைக்காக 3 மணி நேரம் போக்குவரத்தைத் தடை செய்தார்கள். நடந்து செல்பவர்கள் கூட முதல்வரைக் காண வரவில்லை.
மாவட்டத்தின் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். மக்கள் நினைக்க வேண்டுமே?
மக்கள் நினைத்திருந்தால் சித்திரைத் திருவிழா போல லட்சக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள். முதல்வரின் ரோடு ஷோ-விற்குத் தானா சேர்ந்த கூட்டம் அல்ல., செயற்கையாகக் கூட்டப்பட்ட கூட்டம்.
முதல்வர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார், சென்னை கூவம் கால்வாயைப் பார்த்ததே இல்லையா? மதுரையில் சாலைகள் எல்லாம் குண்டும், குழியுமாக உள்ளன.
அதில்தான் நாம் நடந்து செல்கிறோம். நடந்து சென்றால்கூட வரி விதிக்கும் அளவுக்கு வரி போடுகிறார்கள். ஆனால், சொகுசு காரில் வரும் முதலமைச்சருக்காகப் புதிய சாலைகள் போடுகிறார்கள்.
பந்தல்குடி கால்வாய் அருகே ஒருபுறம் இஸ்லாமியர்களும், மற்றொருபுறம் பட்டியலின மக்களும் வாழ்கிறார்கள். இந்தக் கால்வாயில் திரை அமைத்தது குறித்து விமர்சனம் செய்தேன். உடனே திமுகவினர், ‘தெர்மாகோல் விஞ்ஞானியே நீ என்ன செய்தாய்’ என என்னை விமர்சனம் செய்கிறார்கள்.

எங்கள் ஆட்சிக் காலத்தில் கழிவு நீரை உறிஞ்சி சுத்தம் செய்வதற்கு இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறுசுழற்சி செய்து கழிவு நீர் தேங்காமல் மழைநீர் மட்டும் வைகை ஆற்றுக்குச் செல்வதற்கு வழி செய்தோம்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மேம்பாலம் கட்டுவதற்காக இரண்டரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மறுசுழற்சி திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் பந்தல்குடி கால்வாய் சாக்கடையைப் பார்த்து விடக்கூடாது எனத் திரைசீலைகளள் மூலம் அலங்கார தோரணம் கட்டினார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் செய்த பின்புதான் அதை அகற்றினார்கள்.
திரைச்சீலைகள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கலெக்டர் ஒரு விளக்கம் கொடுத்தார். இப்படி ஒரு கலெக்டரை நான் பார்த்ததே இல்லை.
ஒரு முறைக்குப்பின் மறுமுறை ஆட்சிக்கு வர முடியாத சுவாரசியமான கதை திமுகவிடம் உண்டு. அதிலும் மதுரையில் பொதுக்குழு கூட்டினால் எப்போதும் வந்ததில்லை.
திமுகவில் எம்ஜிஆர் இருந்தவரை ஆட்சிக்கு வந்தார்கள். திமுகவை விட்டு எம்ஜிஆர் வெளியே வந்த பிறகு இரண்டாவது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை.
மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. 1977 இல் நடந்த பொதுக்குழுவுக்குப்பின் 12 ஆண்டுகள் அதிமுக ஆட்சி தான் நடந்தது. இதனால்தான் மதுரைக்காரர்கள் என்றாலே திமுக தலைமைக்குப் பிடிக்காது.
யாரோ முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக கலெக்டர் முதல் முதல்வர் வரை ஏமாற்றியதுபோல பொதுக்குழுக் கூட்டத்தை மதுரையில் நடத்தி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள்.

மதுரையில் பொதுக்குழுவை நடத்தி தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டது திமுக. இனி பத்து ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. முதல்வர் அதிமுக பொதுச் செயலாளரைத் திட்டுகிறார். திட்டத் திட்ட திண்டுக்கல்லு. எங்கள் பொதுச் செயலாளர் அவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கிறார்” என்றார்.