
சென்னை: “ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்கவும், விளக்கம் அளிக்கவும் உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டும் என ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், மோடி அரசு அதை செய்ய ஏன் அஞ்சுகிறது?,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி தாக்குதலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், தீரத்துடனும் ஈடுபட்டு, பெரும் தியாகங்கள் புரிந்துள்ள முப்படை வீரர்களை போற்றி, பாராட்டுகிறேன்.