• June 2, 2025
  • NewsEditor
  • 0

‘பஞ்சாபின் வரலாற்றை மாற்றிய ஸ்ரேயாஸ்!’

11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கிறது. அந்த அணியின் நீண்ட நாள் ஏக்கத்தை, கனவை ஸ்ரேயாஸ் ஐயர் தீர்த்திருக்கிறார். பெரு வெற்றி இது. ஆனால், மும்பைக்கு எதிரான போட்டியை வென்ற பிறகு ஸ்ரேயாஸ் ஐயரின் உடல் மொழியை பார்த்தீர்களா? எந்த கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்க மாட்டார். ரொம்பவே நிதானமாக சலனமே இல்லாமல் ஒரு சாதாரண லீக் போட்டியை வென்றதைப் போல பெவிலியனுக்கு சென்றிருப்பார்.

Shreyas Iyer

‘அந்த நிதானம்!’

அதாவது, இதெல்லாம் பெரிய வெற்றி இல்லை. நான் பெற வேண்டிய வெற்றிகளும் சாதனைகளும் இன்னும் நிறையவே இருக்கிறது என்பதைப் போன்ற உடல் மொழி அது. ஒலிம்பிக்ஸில் துப்பாக்கிச்சுடும் போட்டிகளை கவனித்திருந்தால் தெரியும். நன்றாக இலக்கை நோக்கி சுட்டு தங்கப்பதக்கம் வென்றிருப்பார்கள். ஆனாலும் வெற்றியை அறிவிக்கும் போது துள்ளிக் குதித்து கொண்டாடவோ ஆர்ப்பரிக்கவோ மாட்டார்கள்.

போட்டியின் போது இருந்த அதே நிதானத்தை அப்படியே கடைபிடிப்பார்கள். அப்படிப்பட்டவர்களால் மட்டுமே பதக்கங்களை குவிக்க முடியும். ஸ்ரேயாஸின் அமைதியையும் நிதானத்தையும் அத்தோடு ஒப்பிடலாம். அவருமே கூட கிட்டத்தட்ட அந்த துப்பாக்கிச்சுடுதல் வீரர் வீராங்கனைகளின் எண்ணத்தைதான் கொண்டிருக்கிறார்.

பெரிய தருணங்களின் போது நாம் எவ்வளவு அமைதியாக நிதானமாக இருக்கிறோமோ அந்தளவுக்கு நமக்கு சாதகமான ரிசல்ட் கிடைக்கும் என்கிறார். ஸ்ரேயாஸ் ஐயரின் வெற்றியில் இந்த பதற்றமில்லாதத் தன்மைக்கு பெரிய பங்கு இருக்கிறது.

Shreyas Iyer
Shreyas Iyer

‘தோனி ஸ்டைல்!’

மேலும், ஸ்ரேயாஸை பார்க்கையில் தோனியின் நினைவு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. 2008 இல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று ஒரு தொடரில் ஆடுகிறது. அந்த ஓடிஐ தொடரை இந்தியாவே வென்றிருந்தது. கடைசிப் போட்டியின் வெற்றியின் போது தோனி சக வீரர்கள் அத்தனை பேரிடமும் இந்த வெற்றியை பெரிதாகவெல்லாம் கொண்டாடக்கூடாது எனக் கூறிவிடுவார். ஏனெனில், அப்படி கொண்டாடி தீர்த்தோமெனில், ஆஸ்திரேலியா என்னவோ வெல்ல முடியாத அணி போலவும் அவர்களை அதிர்ஷ்டத்தால் வென்றுவிட்டோம் என்பது போலவும் சித்தரிக்கப்படும்.

நாம் ஆஸ்திரேலியாவை வெல்வது ஒரு விஷயமில்லை என்பதை காட்ட வேண்டும். அதற்கு கொஞ்சம் நிதானமாக இருங்கள் எனக் கூறிவிடுவார். அந்த இந்திய அணிதான் பின்நாளில் உலகக்கோப்பையின் நாக் அவுட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக்கோப்பையை வெல்லும்.

Shreyas Iyer
Shreyas Iyer

ஸ்ரேயாஸின் பஞ்சாபை தோனியின் இந்திய அணியோடுதான் ஒப்பிட வேண்டும். இந்த பஞ்சாப் அணிக்கு இந்த சீசனுக்கு முன்பாக என்ன மாதிரியான சித்திரம் இருந்தது என்பது அனைவருக்குமே தெரியும். அவர்கள் மீது ஒரு ஏளனமான பார்வைதான் இருந்தது. அப்படியிருக்க இங்கே போட்டிகளை வென்று துள்ளிக் குதித்தால் எதோ செய்ய முடியாததை செய்ததைப் போல அதிர்ஷ்டத்தின் பலனால் வென்றதைப் போல தோற்றமளிக்கும். அதைத்தான் ஸ்ரேயாஸ் விரும்பவில்லை.

எந்த அணியையும் எளிதில் வீழ்த்தும் வல்லமை என்னுடைய அணிக்கு இருக்கிறதென்பதை ஸ்ரேயாஸ் நிறுவ நினைத்தார். அதன் வெளிப்பாடுதான் வெற்றிக்குப் பிறகான அந்த நிதானமும் அமைதியும்.

‘அணிதான் பிரதானம்!’

எல்லாவற்றுக்கும் மேல் ஆரம்பத்திலிருந்தே அணியை முன் நிறுத்தும் ஒரு கேப்டனாகவே இருந்தார். முதல் போட்டியிலேயே சதம் அடிக்க வாய்ப்பிருந்தும் நான் ஸ்ட்ரைக்கர் முனையிலேயே நின்று சஷாங்க் சிங்கிற்கு வாய்ப்பைக் கொடுத்து அணியின் ஸ்கோரை உயர செய்திருப்பார். அது சாதாரண விஷயமில்லை. அந்த சம்பவத்தை அந்த ஒரு போட்டியோடு சுருக்கியும் பார்க்க முடியாது. ஸ்ரேயாஸ் தவிர்த்த அந்த சதம் பஞ்சாப் அணி வீரர்களுக்கு ஒட்டு மொத்த சீசனுக்குமான மெசேஜை கடத்தியது.

Shreyas Iyer
Shreyas Iyer

அதாவது, தனிப்பட்ட வீரர்களின் நலனை விட அணியின் நலன்தான் முதன்மையானது என்கிற உன்னத செய்தியை தன்னுடைய செயலின் வழி பாடமாகவே நடத்தி காண்பித்துவிட்டார்.

தன்னுடைய வீரர்கள் மீது அவர் வைத்த நம்பிக்கையும் மலை போன்றது. ஒரே அணியில் 6 Uncapped வீரர்களுடன் இறங்கி ஆடி அந்த அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார். இதெல்லாம் வேறெந்த கேப்டனும் செய்யாத சாதனை பிரயத்தனம். பஞ்சாபின் பேட்டிங் ஆர்டரையே எடுத்துக் கொள்ளுங்களேன். பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஸ் ஆர்யா, நேஹல் வதேரா, சஷாங்க் சிங் என முக்கியமான இந்திய வீரர்கள் எல்லாருமே Uncapped. தன்னைச் சுற்றி இருந்த இந்திய வீரர்களை ஆட வைக்கிறார்.

அவர்களுக்குதான் முக்கியத்துவமும் கொடுக்கிறார். மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கூட பாருங்கள். ஸ்டாய்னிஸூக்கு முன்பாக சஷாங்க் சிங்கை ஆட வைத்திருப்பார். அதேமாதிரி, லீக் போட்டிகளில் மேக்ஸ்வெல்லுக்கு மேலே நேஹல் வதேராவை ஆட வைத்திருப்பார். ஸ்ரேயாஸின் கேப்டன்சியில் கவனம் கொடுக்க வேண்டிய முக்கியமான அம்சம் இது.

எல்லாவற்றுக்கும் மேல் அந்த பாசிட்டிவ்வான அணுகுமுறை. சறுக்கல்கள் ஏற்பட்டாலும் அதிலேயே தேங்கி விடாமல் மீண்டெழுந்து முன்னேற வேண்டும். நேற்றையப் போட்டியில் முக்கியமான கட்டங்களில் விக்கெட் விழும். அந்த சமயத்தில் மொமண்டமை விடாமல் அப்படியே எடுத்துச் செல்லும்படி அதிரடியாக ஆடியிருப்பார். குறிப்பாக, பும்ராவின் அந்த யார்க்கரை அடித்த விதம் இருக்கிறதே. அதை என்ன சொல்ல…பும்ராவின் யார்க்கர்கள்தான் பல போட்டிகளில் கேம் சேஞ்சிங் தருணங்களாக அமைந்திருக்கிறது. ஆனால், ஸ்ரேயாஸிடம் அது எடுபடவில்லை.

Shreyas Iyer
Shreyas Iyer

தோனி, ரோஹித், கம்பீர் மாதிரியான வீரர்கள்தான் ஐ.பி.எல் இன் சிறந்த கேப்டன்களாக கொண்டாடப்பட்டிருக்கின்றனர். இப்போது அந்த வரிசையில் ஸ்ரேயாஸூம் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இந்திய அணியிலும் ஒரு தலைவனாக ஸ்ரேயாஸை பார்த்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *