
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் புதிய, இரட்டை பாதை என 9 திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியுள்ளது. இது, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் நடைபெறும் 12 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.727.79 கோடி நிதியை பல்வேறு காரணங்களை முன்வைத்து தெற்கு ரயில்வே திருப்பி அனுப்பியுள்ளது.
இதில் தமிழகத்தில் நடைபெறும் 9 திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதியும் அடங்கும். 3 இரட்டை, அகலப் பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடி, 6 புதிய பாதை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.247 கோடி நிதியும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதுபோல, கேரளாவில் 3 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. திண்டிவனம் – திருவண்ணாமலை (வழி:செஞ்சி), அத்திப்பட்டு- புதூர் ஆகிய 2 புதிய ரயில் பாதை திட்டங்கள் ஏற்கெனவே நிறுத்தி வைக்கப்பட்டன.