
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைத்தள பக்கமான ட்ரூத் சோசியலில் முன்வைத்துள்ள கான்ஸ்பிரசி தியரியை (சதி கோட்பாடு) பலரின் கண்டத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
முன்னாள் அதிபர் பைடன் கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் க்ளோன் அல்லது ரோபோட் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதாகவும் எழுதப்பட்ட பதிவை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
ட்ரம்ப் ஆதாரமற்ற கூற்றுகளைச் சொல்வதன் மூலம் அவரை பின்தொடர்பவர்களை வெளிப்படையாக ஏமாற்றுகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு எனக் கண்டித்துள்ளனர் அரசியல் ஆர்வலர்கள்.
என்ன செய்தான் Trump ?
ட்ரம்ப் அவரது பக்கத்தில், “ஜோ பைடன் இப்போது இல்லை – 2020-ல் கொல்லப்பட்டுவிட்டார். நீங்கள் இப்போது பார்ப்பது க்ளோன்கள், டபுள்கள், ரோபோவால் உருவாக்கப்பட்ட ஆன்மா இல்லாத, மனம் இல்லாத உயிரினம்.” என ஒருவர் பகிர்ந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து உலகின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
ட்ரம்ப் இந்த கோட்பாட்டை உண்மையில் நம்புகிறாரா? அவர் இதைப் பகிர்ந்ததன் பின்னணி என்ன என்பது குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
“ட்ரம்ப் தனது அரசியல் வாழ்க்கை முழுவதுமே சதிக் கோட்பாடுகளையும் பிழையான தகவல்களையும் பரப்பி வந்துள்ளார்” என்கிறது எகனாமிக் டைம்ஸ் வலைத்தளம்.
2020 தேர்தலில் தான்தான் வென்றதாகவும், முன்னார் அதிபர் ஒபாமாவின் பிறப்பிடம் குறித்தும் ட்ரம்ப் வதந்திகளைப் பரப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகளைக் கூறுவதன் மூலம், இதுபோன்ற பதிவுகள் பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, வீணான விவாதங்களைத் தூண்டுகிறார் ட்ரம்ப் என உண்மை சரிபார்ப்பவர்களும் அரசியல் ஆர்வலர்களும் கணித்துள்ளனர்.
ட்ரம்ப் கான்சிபிரசி தியரிகளை முக்கிய விவாதமாக்க முனைவது, “அமெரிக்காவின் சீரழிவு” என விமர்சகர்கள் கண்டித்துள்ளனர்.
ஏற்கெனவே அமெரிக்க அரசியலில் பிழையான தகவல்களும், சதிக் கோட்பாடுகளும் தாக்கம் செலுத்துவது அதிகரித்திருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் செயல்பாடு பலரையும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.