
மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மாநில அரசு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் `லட்கி பெஹின் யோஜனா’ என்ற திட்டத்தை அறிவித்தது.
தேர்தல் நேரம் என்பதால் இத்திட்டத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.
அரசு இத்திட்டத்தில் சேர சில நிபந்தனைகளை விதித்து இருந்தது. ஆனால் அந்த நிபந்தனைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆவணங்களை ஆய்வு செய்யாமல் அவசரமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தற்போது இத்திட்டத்தில் இருக்கும் பெண்களின் ஆவணங்களை மாநில அரசு ஆய்வு செய்ய ஆரம்பித்து இருக்கிறது. ஏற்கெனவே அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டு அதில் தகுதியில்லாதவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது.
தற்போது மேலும் 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் அரசு பெண் ஊழியர்கள் 2200 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி தட்கரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் அஜித்பவார், `லட்கி பெஹின் யோஜனா’ திட்டத்தில் பெண்கள் சேர்க்கப்பட்டதில் தவறு நடந்துள்ளது. அத்திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதனை அமல்படுத்த குறுகிய காலமே இருந்தது.
தேர்தல் நெருங்கியதால் விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்ய போதிய கால அவகாசம் இல்லாமல் போய்விட்டது. அப்படி இருந்தும் தகுதியான பெண்கள் மட்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டது. தகுதியில்லாதவர்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வந்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படாது” என்று தெரிவித்தார்.
ஆனால் 2200 பெண் அரசு ஊழியர்களுக்கு லட்கி பெஹின் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்ட பணம் திரும்ப பெறப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. லட்கி பெஹின் யோஜனா திட்டத்தால் மற்ற அரசு திட்டங்கள் பாதிக்கப்படுவதாகவும், பழங்குடியின மேம்பாட்டுத்துறை நிதி லட்கி பெஹின் யோஜனா திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.