• June 2, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: என் தங்கைக்கு கடந்த   சில நாள்களுக்கு முன்புதான் சிசேரியன் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்தது. அதிலிருந்து அவளுக்கு மலச்சிக்கல் பிரச்னையும், அதிகப்படியான வாயு வெளியேறும் பிரச்னையும் ஆரம்பித்திருக்கின்றன. அடிக்கடி வயிற்று உப்புசம், வயிற்றுவலியும் வருவதை உணர்வதாகக் சொல்கிறாள். இதற்கெல்லாம் என்ன காரணம்… இதிலிருந்து மீளவே முடியாதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்  

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

உங்கள் தங்கைக்கு சமீபத்தில்தான்  சிசேரியன் பிரசவம் ஆனதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அறுவை சிகிச்சை முடிந்ததும் பொதுவாகவே வயிற்றுவலி இருக்கலாம். மயக்க மருந்தின் வீரியம் குறையாதவரை அந்த வலி தெரியாமலிருக்கும். மருந்தின்  வீரியம் குறையத் தொடங்கியதும் வலியை உணர ஆரம்பிப்பார்கள். மருத்துவர் பரிசோதனைக்கு வரும்போது வயிற்றில் கை வைத்தாலே தாங்க முடியாத வலியை உணர்வார்கள். அந்த வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். 

அறுவை சிகிச்சையின் போது அதிகப்படியான காற்றானது சிறுகுடலுக்குள் சேர்ந்திருக்கும். அதனால் வயிற்று உப்புசமும் வயிற்றுவலியும் இருக்கலாம். பிரசவத்துக்கு முன்பு கொடுக்கப்பட்ட அனஸ்தீசியா, பிரசவத்தின் போதும், பிரசவத்துக்குப் பிறகும் கொடுக்கப்பட்ட மருந்துகளின் பக்க விளைவாகவும் வயிற்றுவலி வரும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு செரிமான இயக்கமானது மந்தமாகியிருக்கும். குடல்பகுதி ஓய்வில் இருப்பதாலும்  வயிற்றுவலி இருக்கலாம். பிரசவத்துக்குப் பிறகு, குறிப்பாக சிசேரியனுக்கு பிறகு பல பெண்களும் மலச்சிக்கல் பிரச்னையை எதிர்கொள்வதுண்டு.

அதற்கு காரணம், உடலில் ஏற்படுகிற நீரிழப்பு. சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிறைய தண்ணீர் குடிக்க முடியாது. டிரிப்ஸ் போடப்பட்டிருக்கும். டியூப் வழியே திரவம் உடலுக்குள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் செரிமானம் மந்தமாகவே இருக்கும். அதனால் மலச்சிக்கல் பிரச்னை வந்திருக்கும். வயிற்று வலியும் இருக்கும்.

சிசேரியன் ஆனதிலிருந்து 6 முதல் 8 மணி நேரத்தில் எழுந்து நடமாடலாம். அவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட முடியவில்லை என்றால், குறைந்தது 12 மணி நேரத்துக்குள்ளாவது நடக்க வேண்டும்.

பிரசவமான பெண்களுக்கு, குறிப்பாக சிசேரியன் செய்யப்பட்ட பெண்களுக்கு முதல் சில நாள்களுக்கு மலம் கழிப்பதில் பயம் இருக்கும். மலம் கழித்தால் தையல் பிரிந்துவிடுமோ என்ற பயத்தில் மலம் கழிப்பதையே தவிர்ப்பார்கள்.

அதனாலும் வயிற்றுவலியும், மலச்சிக்கலும் வரும். சிசேரியன் செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உடல் இயக்கம் வெகுவாகக் குறைந்திருக்கும். அதனாலும் மலச்சிக்கலும் வயிற்றுவலியும்  இருக்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் சொல்லும் நேரம்வரை ஓய்வெடுத்தால் போதுமானது.  சிசேரியன் செய்யப்பட்டிருந்தால் சிறுநீர் வெளியேறுவதற்காக  கதீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அதை அகற்ற 12 மணி நேரம் ஆகும். ஆனால், சிசேரியன் செய்துகொண்டவர்கள், அனஸ்தீசியாவின் வீரியம் குறையத் தொடங்கியதுமே எழுந்து நடமாட ஆரம்பிப்பதுதான் சரியானது.

அதாவது கதீட்டரை அகற்றும்வரை காத்திருக்காமல், சிசேரியன் ஆனதிலிருந்து 6 முதல் 8 மணி நேரத்தில் எழுந்து நடமாடலாம். அவ்வளவு சீக்கிரம் எழுந்து நடமாட முடியவில்லை என்றால், குறைந்தது 12 மணி நேரத்துக்குள்ளாவது நடக்க வேண்டும். உடலியக்கம் இருந்தால், உடலில் சேர்ந்த வாயு வெளியேறும். வாயு வெளியேறிவிட்டாலே, குடல் இயக்கம் சீராகிவிட்டதாக அர்த்தம். மருத்துவரும் வயிற்றைத் தொட்டுப் பார்த்து குடல் இயக்கம் தொடங்கிவிட்டதை உறுதிசெய்வார்.

சிசேரியன்

சிசேரியன் செய்யப்பட்டதும் ஒரே நேரத்தில் மொத்தமாகச் சாப்பிடாமல், சிறு இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட வேண்டும். டாக்டர் சொன்னதும் நிறைய தண்ணீர் குடிக்கத் தொடங்க வேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகள் நிறைய சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இதையெல்லாம் உங்கள் தங்கைக்கு எடுத்துச் சொல்லுங்கள். உணவு, உடலியக்கம் போன்றவற்றில் கவனமாக இருந்தாலே இந்தப் பிரச்னைகள் மெள்ள மெள்ள சரியாகும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *