• June 2, 2025
  • NewsEditor
  • 0

நடப்பு ஐ.பி.எல் சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல 4-வது முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதற்கேற்றவாறு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒட்டுமொத்த அணியுமே வேற மோடில் இருக்கிறது.

கடந்த மூன்று சீசன்களாக ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் இரண்டு முறை பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறினாலும் பெங்களூருவால் இறுதிப்போட்டிக்குச் செல்லமுடியவில்லை.

Rajat Patidar | ரஜத் படிதார்

அதனால், மெகா ஏலத்துக்கு முன்பாக ஃபாப் டு பிளெஸ்ஸிஸ் சில வீரர்களை கழற்றிவிட்டு, அணியில் அனுபவ வீரர்கள் இருந்தும் புதிய முயற்சியாக 31 வயது ரஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்தது ஆர்.சி.பி நிர்வாகம்.

அந்த முயற்சி வீண் போகாத வகையில் 14 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

அதிலும், லக்னோவுக்கெதிரான கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்றால்தான் முதல் இரண்டு இடங்களுக்குள் இடம்பெற முடியும் என்ற நெருக்கடியான போட்டியில், 228 என்ற பெரிய இலக்கை அசால்ட்டாக 19 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது ஆர்.சி.பி.

அடுத்து குவாலிஃபயர் 1-ல் பஞ்சாப்பையும் எளிதாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆனால், இதற்கு முன்னர் 2009, 2011, 2016 ஆகிய சீசன்களில் மூன்று வெவ்வேறு கேப்டன்களின் தலைமையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த போதிலும் ஏதோவொரு தவறால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது பெங்களூரு.

ஆர்.சி.பி
ஆர்.சி.பி

எனவே, இதற்கு முன்பு 3 இறுதிப்போட்டிகளில் ஆர்.சி.பி செய்த தவறுகள் என்னென்ன?

அந்தத் தவறுகள் நடப்பு சீசன் இறுதிப்போட்டியில் நிகழாத வண்ணம் அணி எப்படித் தயாராக இருக்கிறது?

இறுதிப்போட்டிக்கு மற்றொரு அணியாக எந்த அணி (மும்பை அல்லது பஞ்சாப்) வந்தால் பெங்களூருவுக்கு எளிதாக இருக்கும் அல்லது கடினமானதாக இருக்கும் என்பதை இனி விரிவாகக் காணலாம்.

ஐ.பி.எல்லின் முதல் 3 சீசன்களில், இப்போதிருக்கும் பிளேஆஃப் சுற்று நடைமுறை அப்போது இல்லை.

புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளில் முதலிடத்தில் இருக்கும் அணியும் நான்காவது இடத்தில் இருக்கும் அணியும் இறுதிப்போட்டிக்கான முதல் அரைறுதிப் போட்டியில் மோதும்.

அதேபோல், இரண்டாவது இடத்தில் இருக்கும் அணியும் மூன்றாவது இடத்தில் இருக்கும் அணியும் இரண்டாவது அரைறுதிப் போட்டியில் மோதும்.

ஐபிஎல்
ஐபிஎல்

இரண்டு அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். அவ்வாறு, 2009-ல் டெல்லி (1), சென்னை (2), பெங்களூரு (3), ஹைதராபாத் (4) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.

இதில், அரையிறுதி போட்டிகளின் முடிவில் அனில் கும்ப்ளே தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவும், ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத்தும் மோதின.

டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு அனில் கும்ப்ளே, முதல் ஓவரிலேயே கில்கிறிஸ்ட்டை டக் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

ஆனால், அந்த மொமென்ட்டை ஆர்.சி.பி பவுலர்கள் தக்கவைக்கத் தவறிய நேரத்தில் 9-வது ஓவரில் உள்ளே வந்த கும்ப்ளே, மெல்ல வலுபெற்றுக்கொண்டிருந்த கிப்ஸ், சைமண்ட்ஸ் பார்ட்னர்ஷிப்பில் சைமண்ட்ஸ் பெவிலியனுக்கு அனுப்பினார்.

இருப்பினும், அடுத்து இணைந்த கிப்ஸ், ரோஹித் கூட்டணி 50 ரன்களைக் கடந்தது.

பின்னர், 17-வது ஓவரில் மீண்டும் உள்ளே வந்த கும்ப்ளே, ரோஹித்தை அவுட்டாக்கி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார்.

அதே ஓவரில் இன்னொரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனாலும், கடைசி வரை கிப்ஸை ஆர்.சி.பி பவுலர்களால் அவுட்டாக்கவே முடியவில்லை.

கும்ப்ளே
கும்ப்ளே

கிப்ஸின் அரைசத உதவியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் குவித்தது ஹைதரபாத்.

பெங்களூரு அணியில் கும்ப்ளே மொத்தமாக 4 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆர்.சி.பி-க்கு எல்லாம் நன்றாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில், 120 பந்துகளில் 144 ரன்கள் அடித்தால் கோப்பை என கனவுகொண்டிருந்த பெங்களூரு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தனர் ஹைதராபாத் பவுலர்கள்.

பவர்பிளேயில் காலிஸ், மணீஷ் பாண்டே விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை மட்டுமே அடித்து தடுமாறியது பெங்களுரு.

அந்த சமயத்தில், வான்டெர் மெர்வ் சிக்ஸர்களாக விளாசி பெங்களுருவில் ஸ்கோரை உயர்த்திக் கொண்டிருந்தார்.

அப்போது, 9-வது ஓவரில் உள்ளே வந்த பிரக்யன், வான்டெர் மெர்வை அவுட்டாக்கி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அந்த விக்கெட்டின்போது 57 ரன்களில் இருந்த ஆர்.சி.பி அணி அடுத்த 7 ஓவர்களில் 53 ரன்களுக்கு டிராவிட், ராஸ் டெய்லர், விராட் கோலி, மார்க் பவுசர் உட்பட ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி ஓவரில் 14 ரன்கள் அடித்தால் பெங்களூரு வெற்றி, ஒரு விக்கெட் எடுத்தால் ஹைதராபாத் வெற்றி.

டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத்
டெக்கான் சார்ஜர்ஸ் ஹைதராபாத்

இப்படியான பரபரப்பான சூழலில் சூழலில் கடைசி ஓவரை வீசவந்தார் அந்த சீசனின் பர்பிள் கேப் ஹோல்டர் ஆர்.பி.சிங். ஸ்ட்ரைக்கிலிருந்த கேப்டன் கும்ப்ளே முதல் பந்திலேயே சிங்கிள் எடுத்து ஸ்ட்ரக்கை உத்தப்பாவிடம் கொடுத்தார்.

இருப்பினும், அடுத்த இரண்டு பந்துகளை டால் பால் ஆக்கிய ஆர்.பி. சிங், முடிவில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வெற்றி பெறவைத்தார்.

போட்டியின் முதற்பாதியில் ஹைதராபாத்தை 143 ரன்களில் மட்டுப்படுத்திய பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், எதிரணியில் கிப்ஸ் போல இங்கு ஆர்.சி.பி பேட்ஸ்மேன் ஒருவர்கூட நிலைத்து ஆடாமல் வரிசையாக விக்கெட்டுகளை இழந்ததே.!

2011-ல்தான் முதல் முறையாக இப்போதிருப்பது போல 10 அணிகள் பங்கேற்றன. 2010 வரையில் விளையாடிவந்த 8 அணிகளுடன் கொச்சி டஸ்கஸ் கேரளா, புனே வாரியர்ஸ் அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த சீசனில்தான், இப்போது நடைமுறையில் இருக்கும் பிளேஆஃப் சுற்று முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது, புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த ஆர்.சி.பி-யும், சி.எஸ்.கே-வும் மோதிய முதல் குவாலிஃபயரில் சி.எஸ்.கே வெற்றிபெற்று நேராக இறுதிப்போட்டிக்குச் சென்றது.

முரளி விஜய்
முரளி விஜய்

அதைத்தொடர்ந்து, எலிமினேட்டரில் கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை அணியை இரண்டாவது குவாலிஃபயரில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

சேப்பாக்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அதன்படி, ஓப்பனிங் இறங்கிய சென்னையின் ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஓப்பனிங் கம்போ முரளி விஜய், மைக் ஹஸி ஜோடி, ஆர்.சி.பி பவுலர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கொடுக்காமல் 10+ ரன்ரேட்டில் பேட்டிங் ஆடினர்.

மைக் ஹஸி
மைக் ஹஸி

ஜாகீர் கான், கேப்டன் டேனியல் வெட்டோரி போன்ற பவுலர்கள் இருந்தும் விக்கெட் நெருக்கடியை பெங்களூரு பவுலிங் யூனிட்டால் உருவாக்க முடியவில்லை.

இருவரும் அரைசதம் கடந்து அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த வேளையில் 15-வது ஓவரில் 63 ரன்களில் அவுட்டானார் ஹஸ்ஸி. அந்த சமயத்தில் சென்னையின் ஸ்கோர் 159.

விக்கெட் விழுந்தாலும் சென்னையின் ரன்ரேட் 10-க்கு கீழ் குறையவில்லை. ஒன்டவுன் இறங்கிய தோனியும் முரளி விஜயுடன் சேர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

அப்போது, ஸ்ரீநாத் அரவிந்த் வீசிய 19-வது ஓவரில் முரளி விஜய் 95 ரன்களில் அவுட்டாகி சதத்தை மிஸ் பண்ணார். அடுத்த பந்திலேயே தோனியும் அவுட்.

கெயில் வீசிய கடைசி ஓவரில் அல்பி மோர்கலும், ரெய்னாவும் அடுத்தடுத்து அவுட்டாக கடைசி பந்தில் பிராவோவின் சிக்ஸரோடு 205 ரன்களைக் குவித்தது சி.எஸ்.கே.

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் முதல்முறையாக 200+ ரன்கள் அடிக்கப்பட்டது அப்போதுதான்

இன்றைக்கு வேண்டுமானால் 200+ டார்கெட் ஐ.பி.எல்லில் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், 13 வருடங்களுக்கு 180+ டார்கெட்டே கடினம்.

அப்படியிருக்க, 206 என்ற இமாலய இலக்கை நோக்கி கெயிலும், மயங்க் அகர்வாலும் ஓப்பனிங் இறங்கினர்.

பவுலிங்தான் சொதப்பலாகிவிட்டது, ஆனாலும் பேட்டிங்கில் இந்த மேட்சை வென்றுவிடலாம் என்று கெயில், டிவில்லியர்ஸ், கோலி ஆகியோரை மலைபோல் நம்பியது ஆர்.சி.பி.

முதல் ஓவரிலேயே கெயிலை டக் அவுட்டாக்கி அந்த நம்பிக்கையில் முதல் கல்லை வீசினார் அஸ்வின். மயங்க் அகர்வாலும் அடுத்த இரண்டு ஓவர்களில் அவுட்டாக கோலியும் டிவில்லியர்ஸும் கைகோர்த்தனர்.

இந்த பார்ட்னர்ஷிப் கொஞ்சம் பொறுப்புடன் ஆடி கியர் மாற்றும் வேளையில் பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே டிவில்லியர்ஸை அவுட்டாக்கினார் ஜகாதி.

அடுத்து 10-வது ஓவரில் கோலியை ரெய்னா வெளியேற்றினர். இந்த மூவேந்தர்களும் அவுட்டான கணமே சென்னைக்குதான் கோப்பை என்பது உறுதியாகிவிட்டது.

சி.எஸ்.கே - 2011
சி.எஸ்.கே – 2011

சவுரவ் திவாரி மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில் மற்ற வீரர்கள் வருவதும் போவதுமாக நடையைக் கட்டிக்கொண்டிருந்தனர்.

20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களுருவால் 147 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன்மூலம், 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சி.எஸ்.கே, ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில், ஆர்.சி.பி-யின் தோல்விக்கு பவுலிங் மற்றும் பேட்டிங் யூனிட் இரண்டுமே தான் காரணம்.

எந்தவொரு ஆர்.சி.பி ரசிகனும் மறக்க முடியாத, அதேசமயம் மறக்க நினைக்கின்ற ஒரு சீசன் என்றால் அது 2016 சீசன்தான்.

ஐ.பி.எல் வரலாற்றில் எந்தவொரு வீரரும் செய்யாத சாதனையாக கேப்டன் கோலி ஒரே சீசனில் நான்கு சதங்கள் அடிக்க, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் பிடித்து, குவாலியர் 1-ல் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தி கேஷுவலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபக்கம், எலிமினேட்டரில் கொல்கத்தாவையும், குவாலியர் 2-ல் குஜராத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஆர்.சி.பி
ஆர்.சி.பி

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதன்படி, களமிறங்கிய வார்னர் – தவான் கூட்டணி பவர்பிளேயில் விக்கெட் எதுவும் விடாமல் 59 ரன்கள் குவித்து வலுவான பேஸ்மென்ட்டை அமைத்தது.

ஆனால், அடுத்த ஓவரிலேயே தவான் விக்கெட் எடுத்து ஒரு மொமென்ட்டமை கிரியேட் செய்தார் சஹல்.

ஆனாலும், வார்னரை ஆர்.சி.பி பவுலர்கள் கவனிக்கத் தவற அவர் அரைசதம் கடந்தார். யுவராஜும் தன் பங்குக்கு கேமியோ ஆடினார். ஒருவழியாக பெங்களூரு பவுலர்கள் இருவரையும் அவுட்டாக்கினர்.

சரியாக 17 ஓவர்களில் 158 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்தது ஹைதராபாத். அடுத்த 3 ஓவர்களில் ஓவருக்கு அதிகபட்சமாக 10 ரன்கள் அடித்தால் கூட 190 ரன்கள்தான் ஹைதராபத்தால் அடிக்க முடியும் என ஆர்.சி.பி எண்ணிக்கொண்டிருந்த வேளையில்தான் பென் கட்டிங் ஒன் மேன் ஷோ நடத்தினார்.

வெறும் 15 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி என 39 ரன்கள் அடித்து ஆர்.சி.பி-யின் மனக் கணக்குகளையெல்லாம் நொறுக்கிவிட்டார்.

20 ஓவர்களில் 208 ரன்கள் குவித்தது ஹைதராபாத். அதில், கடைசி 3 ஓவர்களில் 50 ரன்கள்.

வாட்சன், ஜோர்டன், சஹல் ஆகியோரின் 12 ஓவர்களில் மட்டும் 141 ரன்கள் அடித்தது ஹைதராபாத்.

2011-க்கு பிறகு மீண்டுமொருமுறை இறுதிப்போட்டியில் 200+ டார்கெட்டை எதிர்கொண்டது பெங்களூரு.

ஆனால், அன்று ஏமாற்றிய கெயிலும், கோலியும் இம்முறை எந்தத் தவறும் செய்யவில்லை.

புவனேஷ்வர் குமார், முஸ்தாபிஜுர் ரகுமான், ஹென்றிக்ஸ் என யார் பந்துபோட்டாலும் சிக்ஸர்களால் வாண வேடிக்கை காட்டிய கெயில் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

10 ஓவர்களில் கெயில் – கோலி 112 ரன்களை சேர்த்தது. இந்த நேரத்தில்தான், பேட்டிங்கில் ஆட்டத்தை மாற்றிய பென் கட்டிங் 11 ஓவரில் கெயிலை அவுட்டாகி மீண்டுமொருமுறை ஆட்டத்தை திசைதிருப்பினார்.

அடுத்த இரண்டாவது ஓவரில் அரைசதத்தோடு கோலியும் அவுட்டாக, அடுத்தடுத்த ஓவரில் டிவில்லியர்ஸ், கே.எல்.ராகுல், வாட்சன் ஆகியோர் என மொத்த பேட்டிங் யூனிட்டையும் சரித்தனர் ஹைதராபாத் பவுலர்கள். முடிவில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல்முறையாக ஐ.பி.எல் கோப்பையைக் கைப்பற்றியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2016
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 2016

2011 இறுதிப்போட்டியில் எப்படி சேஸிங்கில் கெயில், கோலி, டிவில்லியர்ஸ் அவுட்டானதும் நம்பிக்கை விட்டதோ, அதே தவறைத்தான் இங்கும் செய்தது ஆர்.சி.பி.

இருப்பினும் இது இரண்டாம்பட்ச காரணம்தான். முதல் காரணம் பவுலிங்கில் டெத் ஓவரில் கோட்டைவிட்டதுதான் மிகப்பெரிய தவறு.

வெளியூர் மைதான ஃபேக்டர்:

பெங்களூரு அணி இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கான முக்கிய காரணம் சொந்த மைதானத்தை விடவும் வெளியூர் மைதானங்களில் சிறப்பாகச் செயல்பட்டதே.

மொத்தமாக சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடிய 6 போட்டிகளில் (ஒரு போட்டி மழையால் ரத்து) வெறும் 2 போட்டிகளில் மட்டுமே ஆர்.சி.பி வெற்றிபெற்றது.

RCB
RCB

அதேசமயம், குவாலிஃபயர் 1 உட்பட வெளியூர் மைதானங்களில் விளையாடிய 9 போட்டிகளில் பெங்களூரு அணி ஒன்றில் மட்டும் தோற்று 8 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கிறது.

எனவே, இறுதிப்போட்டி அகமதாபாத் ஸ்டேடியத்தில் என்பதால் இந்த ஃபேக்டர் ஆர்.சி.பி-க்கு சாதகமானதாகத் தெரிகிறது.

பவுலிங்கில் மிரட்டல்:

மெகா ஏலத்தின்போது புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட் ஆகியோரை ஆர்.சி.பி எடுத்தபோது எழுந்த எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே செயல்பட்டிருக்கிறது புவி – ஹேசில்வுட் – யஷ் தயாள் கூட்டணி.

குறிப்பாக, பெங்களுருவின் பவுலிங் துருப்புச் சீட்டே ஹேசில்வுட்தான்.

புவி, ஹேசில்வுட் போன்றோர் ஐ.பி.எல், ஐ.சி.சி நாக்அவுட் போட்டியில் விளையாடியிருக்கும் அனுபவம் நிச்சயம் பெங்களூருவுக்கு கைகொடுக்கும்.

ஹேசில்வுட், கோலி - RCB
ஹேசில்வுட், கோலி – RCB

கூடவே குருணால் பாண்டியா எதிர்பாராத நேரத்தில் விக்கெட் எடுத்தும், ரன்கள் அடித்தும் அணியின் வெற்றிக்கு வழிவகுக்க, லீக் போட்டிகளில் பல அடி வாங்கிக்கொண்டிருந்த சுயாஷ் சர்மாவும், குவாலிஃபயர் 1-ல் பஞ்சாப்புக்கெதிராக மேட்ச் வின்னிங் பவுலிங் போட்டு நம்பிக்கையளித்திருக்கிறார்.

சாலிட் பேட்டிங்:

ஆர்.சி.பி கடைசியாக விளையாடிய இரண்டு இறுதிப்போட்டிகளிலும் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே, கெயில், கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே அந்த நம்பிக்கொண்டிருந்ததுதான்.

ஆனால், இந்த சீசன் அப்படியல்ல.

Jithesh Sharma
Jithesh Sharma

கோலி வழக்கம்போல கன்சிஸ்டன்சியாக ஆட, பிலிப் சால்ட், பட்டிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரோமரியோ ஷெப்பர்ட் என தனித்தனியே மேட்ச் வின்னிங் பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர்.

வெறுமனே ஆன் பேப்பரில் என்றில்லாமல், இவர்கள் அனைவருமே இந்த சீசனில் தனித்தனியே செய்துகாட்டியிருக்கிறார்கள்.7

அதேசமயம், ஆர்.சி.பி அணிக்கு வீக்னஸ் கிடையவே கிடையாது என்று சொல்ல முடியாது. இதுவரை ஆடிய மூன்று இறுதிப்போட்டியிலும் சேஸிங் ஆடி ஒன்றில் கூட வெற்றிபெறாததால், நிச்சயம் சேஸிங் முக்கிய காரணியாக இருக்கும்.

மேலும், இந்த சீசனில் பெங்களுருவின் மோசமான தோல்வியே பஞ்சாப்புக்கெதிராகத்தான்.

அதுவும் மோசமாக 95 ரன்கள் மட்டுமே அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது.

அடுத்த போட்டியிலேயே, பஞ்சாப்பை 160 ரன்களுக்குள் சுருட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட்டாக வெற்றிபெற்றது ஆர்.சி.பி. அதேபோல், குவாலிஃபயர் 1-லும் 101-ல் பஞ்சாப்பை வாரிச்சுருட்டி கேஷுவலாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

PBKS vs RCB - IPL 2025 Final
PBKS vs RCB – IPL 2025 Final

இந்த சீசனில், இரு அணிகளும் மோதிய மூன்று போட்டிகளும் லோ ஸ்கோர் மேட்ச். ஆனால், முதல் பேட்டிங்கில் 200+ ரன்கள் குவித்து இதுவரை தோல்வியே சந்திக்காத மும்பையை குவாலிஃபயர் 2-ல் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது ஸ்ரேயஸ் அண்ட் கோ.

மேலும், குவாலிஃபயர் 2 நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில்தான் இறுதிப்போட்டியும் என்பதால், ஆர்.சி.பி-யை பஞ்சாப்புக்கு மைதானத்தை எளிதாகக் கணிக்கக் கூடும்.

எனவே, பஞ்சாப் அணி முதல் கோப்பை உச்சி முகரும் வேட்கையில் பெங்களூருவுக்கு நிச்சயம் சவாலளிக்கும்.

எது எப்படியோ, கோப்பையை வெல்ல இனி அணிகளுக்கும் சமமான வாய்ப்பு இருப்பதால், நிச்சயம் அடுத்தநொடி ஆச்சர்யங்களைத் தரக்கூடிய இறுதிப்போட்டியானது பஞ்சாப் அல்லது பெங்களூரு முதல் முறையாக கோப்பையைக் கையிலேந்தும் போட்டியாக இருக்கும்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *