
நாட்டில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகரித்து வரும் மாநிலங்களில் கேரள மாநிலமும் முக்கிய இடங்களில் ஒன்றாக இருக்கிறது. வயநாடு, மலப்புரம் போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் காடழிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால் குடியிருப்பு பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் இயல்பாகி வருகிறது. இதனால் எதிர்கொள்ளல்களும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மலப்புரம் அருகில் உள்ள கருவாரக்குண்டு ரப்பர் தோட்டத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த கஃபூர் அலி என்பவர் கடந்த மே மாதம் 15 – ம் தேதி புலி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைக் கொன்ற புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் களமிறங்கிய வனத்துறையினர், 10 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டு தானியங்கி கண்காணிப்பு கேமிராக்களையும் பொருத்தி கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தான் புலிக்கு வைக்கப்பட்டிருந்த கூண்டு ஒன்றில் சிறுத்தை வந்து சிக்கியிருக்கிறது.
பின்னணி குறித்து தெரிவித்த மலப்புரம் வனத்துறை, “ரப்பர் தோட்ட தொழிலாளியைத் தாக்கிக் கொன்ற புலியை உயிருடன் பிடிக்கும் பணியில் 100 -க்கும் அதிகமான வனத்துறையினர் களத்தில் உள்ளனர். அடுத்த நபரை அந்த புலி தாக்குவதற்குள் பிடித்தாக வேண்டும் என தீவிரமாக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து கொண்டிருந்த நிலையில், அதில் தானாக வந்து சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது.

“அந்த சிறுத்தை கால்நடைகளைத் தாக்கி வந்ததால் அதை வனத்திற்குள் விடுவிக்க வேண்டாம்” என உள்ளுர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
“அந்த சிறுத்தையின் உடல்நலம் போன்றவற்றை ஆய்வு செய்து மீண்டும் வனத்திற்குள் விடுவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். புலியை பிடிப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும்” என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.