
சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இதற்கிடையே பணிஒய்வு உட்பட பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.