
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக முன்னெடுக்க வேண்டும் என சிறப்பு தீர்மானத்தை மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.