
கோவை: “தேமுதிகவுடன் சுமுகமான உறவு இருக்கிறது. ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது ஒரு போதும் நடக்காது.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
முன்னதாக, இன்று காலையில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். 2026-ல் தேமுதிகவுக்கு சீட் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அரசியல் பயணம் தேர்தலை ஒட்டியே இருக்கும் என்பதால், தேமுதிகவின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்.” என்று சூசகமாகப் பேசினார். இதனால், அதிமுக முடிவில் தேமுதிகவுக்கு அதிருப்தி, கூட்டணியில் விரிசல் போன்ற விமர்சனங்கள் எழுந்தன.