
பெங்களூரு அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுவிட்டது. இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பையும் பஞ்சாபும் இன்று மோதி வருகின்றன. இந்நிலையில், பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஆர்சிபி கோப்பையை ஏன் வெல்ல வேண்டும் என பேசியிருக்கிறார்.
டீவில்லியர்ஸ் பேசியதாவது, ‘எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்தால் பெங்களூரு அணி இறுதிப்போட்டியில் மும்பையை விட பஞ்சாபை எதிர்கொள்வதுதான் சாதகமான விஷயமாக இருக்கும். ஆனால், கொஞ்சம் பக்குவமாகவும் யோசிக்க வேண்டும். எந்த அணி தகுதிப்பெறும் என்பது நம் கையில் இல்லை. மும்பை இறுதிப்போட்டிக்கு வந்து அவர்களை வீழ்த்தி பெங்களூரு வெல்லும்பட்சத்தில் அதைவிட சிறப்பான விஷயம் வேறெதுவும் இருக்காது.
மற்ற கோப்பைகளை வென்றிருந்தாலும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதும் விராட் கோலியின் விருப்பமாகத்தான் இருக்கும். கோப்பையை வெல்ல அவர் தகுதியானவரும் கூட. ஆர்சிபியின் தொடக்கக் காலத்திலிருந்து அந்த அணியில் இருக்கிறார்.

கடினமாக உழைத்திருக்கிறார். அவரின் ஆட்டத்தை நன்றாக தகவமைத்துக் கொள்கிறார். உடற்திறனை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். அணியை முன் நின்று வழிநடத்துகிறார். அவரின் கரியரின் கடைசிக்கட்டத்திலும் இருக்கிறார். இந்த சமயத்தில் கோப்பையை வெல்வது அவருக்கு நிறைவாக இருக்கும். கோலி கோப்பையை வெல்வார் என நம்புகிறேன்.’ என்றார்.