
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாக தொடங்கிய நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொல்லத்தில் பெய்த மழையில் 24 வீடுகள் சேதமடைந்தன. கொச்சி கும்பளம் பகுதியில் படகு கவிழ்ந்து காணாமல் போன மீனவர் ராதாகிருஷ்ணன்(62) இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காயாங்குளம் பகுதியில் பத்மகுமார்(66) என்பவர் தேங்கிக்கிடந்த தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்தார். வஞ்சூர் பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்ற கண்ணன் (32) என்பவர் வள்ளம் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்தார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் கனமழையில் பைக்கில் சென்ற விஷ்ணு பிரசாத்(27) என்பவரின் பைக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியது.
இதில் விஷ்ணு பிரசாத் மரணம் அடைந்தார். ஆலப்புழாவில் நேற்று இரண்டு பேர் தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்தனர். ஹரிபாடு பகுதியை சேர்ந்த ஸ்டீவ்(23) என்பவர் பைபர் படகில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்ததால் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார். வீட்டுக்கு அருகே வயலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விழுந்து விவசாயி பத்மகுமார்(63) மரணமடைந்தார். ஆலப்புழா மாவட்டத்தில் மட்டும் இதுவரை 6 பேர் மரணம் அடைந்துள்ளனர். கண்ணூரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நளினி(70) என்பவர் இறந்த நிலையில், உடல் அவரது வீட்டுக்கு அருகே கரை ஒதுங்கியது. மழை காரணமாக கேரளாவில் கடந்த 7 நாட்களில் 33 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மிகவும் தாழ்வான பகுதியாகும். கடந்த 2018-ல் தண்ணீர் மழை பிரளயம் ஏற்பட்டபோது மிகவும் பாதிப்புக்கு உள்ளான பகுதி குட்ட நாடு பகுதியாகும். தொடர் மழை காரணமாக குட்டநாடு பகுதியில் தண்ணீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 1053 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3500 பேர் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 3 வீடுகள் முழுமையாக இடிந்த நிலையில், 97 வீடுகள் மழையால் சேதம் அடைந்துள்ளன. குட்டநாட்டில் மட்டும் தண்ணீரில் மூழ்கி இதுவரை நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் 30 முகாம்களில் 976 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநில மின்சார வாரியத்திற்கு மழையால் 164 கோடியே 46 லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3,153 ஹைடென்சன் மின் கம்பங்களும், 23,339 லோடென்சன் மின்கம்பங்களும் உடைந்துள்ளன. 81 லட்சத்து 99 ஆயிரத்து 992 வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மரங்கள் முறிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்ததால், தொடர்ந்து ரயில்கள் மிகவும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து கேரள முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாது பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளா – கர்நாடகா கடல் பகுதியில் ஜூன் 1-ம் தேதி வரையும், லச்சத்தீவு கடல் பகுதியில் ஜூன் 3-ம் தேதி வரை வரையும் மீன்பிடிக்க போக வேண்டாம் என மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 72 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன, 3046 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழைக்காலத்தில் அதிகாரிகளின் அறிவுரைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஆபத்தான இடத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.