
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அதில், துரோக அதிமுக என்று குறிப்பிட்டுள்ளனர். துரோகம் செய்தது நாங்கள் கிடையாது. திமுக தான் நாட்டுக்கே துரோகம் செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லாம் நாட்டு மக்களுக்கு சிறப்பான திட்டங்களை வழங்கியிருக்கிறோம்.
திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அனு தினமும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிபறி, பாலியல் வன்கொடுமை என்று குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோசமான ஆட்சி தான் ஸ்டாலின் மாடல் ஆட்சி.
இவர்கள் தான் துரோக ஆட்சி. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அதுவே அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோது மற்றவர்கள் மீது பழி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மதுரையில் சாக்கடையைத் துணி வைத்து மூடி இருந்த காட்சியே மோசமான ஆட்சிக்கு சாட்சி. ஆதவ் அர்ஜூனா பிரச்னை குறித்து தவெக தலைவர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை. அதுகுறித்து ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்துவிட்டார். அந்த விவகாரம் முடிந்துவிட்டது.
மற்றபடி நடிகர் விஜய் என்னிடம் எதுவும் பேசவில்லை. தேமுதிக கட்சியுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது. அதில் ஏதாவது பேசி குழப்பம் ஏற்படுத்த வேண்டும் நினைக்க வேண்டாம். அது நடக்கவும் நடக்காது.” என்றார்.