
நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 104 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், கடந்த 27-ம் தேதி பி.காம் பட்டப்படிப்பிற்கான ’தொழிற்சாலை சட்டம்’ (இண்டஸ்ட்ரியல் லா) என்ற பாடத்தின் வினாத்தாள் கசிந்தது. இதனையடுத்து அன்று நடக்க இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
புதிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு கடந்த 30-ம் தேதி மறுதேர்வு நடந்தது. மேலும், வினாத்தாள் கசிந்தது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சாக்ரடீஸ் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், “கடந்த 26-ம் தேதி இரவு 10 மணிக்கு பல்கலைக்கழக தேர்வாணையரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மறுநாள் 27-ம் தேதி நடக்க இருந்த பி.காம் பட்டப்படிப்பின் ’தொழிற்சாலை சட்டம்’ பாடத்திற்கான வினாத்தாள் அனுப்பப்பட்டது.
இதன் காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவுகள் 316, 318, 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வு சட்டப்பிரிவுகள் சட்டம் 3, 4 மற்றும் 5 (தேர்வு முறைகேடு) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வாணையரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு வினாத்தாள் அனுப்பிய செல்போன் எண்ணை போலீஸார் சோதனை செய்த போது மதுரையைச் சேர்ந்த அறிவுச்செல்வன் என்பவரது பெயர் தெரிய வந்துள்ளது. அந்த எண்ணை வைத்து யார் அந்த அறிவுச்செல்வன் என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.