• June 1, 2025
  • NewsEditor
  • 0

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காப்பக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து கடந்த மே 12-ம் தேதி படுகொலை செய்தனர்.

வருண்காந்த்

இதுதொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர்கள் கவிதா, ஷாஜி, கிரி மற்றும் காப்பக நிர்வாகிகள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. வருண் கொலைக்கு பிறகு கவிதா, அவரின் கணவர் லட்சுமணன், ஷாஜி, கிரி ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர். அவர்களை பிடிக்க காவல்துறையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

நகை, பணம்

அதில் மகாலிங்கபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் டீம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கவிதா, லட்சுமணன், ஷாஜி உள்ளிட்டோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை போலீஸார் மீட்டனர்.

பொதுவாக குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோரிடம் இருந்து மீட்கப்படும் பணம் மற்றும் நகைகள் அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையான பிறகு அவை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.

நவநீதகிருஷ்ணன்

ஆனால் நவநீதிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 18 சவரன் தங்கநகை மற்றும் ரூ.1.50 பணத்தை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்லாமல், அதை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்ததில், அது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நவநீதகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகாராஜா

மேலும் இந்த வழக்கின் தனிப்படையில் இருந்த மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் மகாராஜா, நவநீதகிருஷ்ணனிடம் இருந்து ரூ.50,000 பெற்றது தெரியவந்தது. மகாலிங்கம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஜாவை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *