
போலீஸ் அதிகாரியின் கடமை உணர்வுக்கு இப்போதும் உதாரணமாகச் சொல்லப்படும் படம், ‘தங்கப்பதக்கம்’. போலீஸ் எஸ்.பி, சவுத்ரியாக சிவாஜியின் கம்பீர நடிப்பை மறந்துவிட முடியுமா என்ன?
இதன் கதையை ‘இரண்டில் ஒன்று’ என்ற பெயரில் நாடகமாக எழுதியவர், அப்போது நாடக ஆசிரியராகவும் பத்திரிகையாளராகவும் இருந்த மகேந்திரன். எஸ்.ஏ. கண்ணன் இயக்கியிருந்த இந்த நாடகத்தில் கடமை தவறாத போலீஸ் அதிகாரியான எஸ்.பி., சவுத்ரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் செந்தாமரை. பலமுறை நடத்தப்பட்ட இந்த நாடகத்தை ஒரு நாள் பார்த்த சிவாஜி கணேசன், செந்தாமரையையும் மகேந்திரனையும் அழைத்தார். நாடக உரிமையை வாங்கிக் கொள்வதாகக் கூறிய அவர், இனி நானே எஸ்.பி., சவுத்ரியாக நடிக்கிறேன் என்றார். பின்னர் கிளைமாக்ஸ் உள்பட சில இடங்களில் மாற்றங்களைச் செய்து, ‘இரண்டில் ஒன்று’வை ‘தங்கப்பதக்கம்’ ஆக்கினார் சிவாஜி.