
வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய அடர் வனப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆனால், அவற்றுக்கான வாழிட எல்லை பற்றாக்குறையாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வனத்தை விட்டு வெளியேற்றப்படும் புலிகள் பெருந்தோட்டங்களில் வாழிட எல்லைகளை வகுத்துக் கொண்டு தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தனியார் பெருந்தோட்டங்களில் மர்மமான முறையில் புலிகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று பைக்காரா வனப்பகுதியில் கடந்த 30 – ம் தேதி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் இளம் ஆண் புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்துளள்ளது.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், ” பைக்காரா வன பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இறப்புக்கான காரணம் விரைவில் தெரியவரும். இதே போல் தற்போது முதுமலையில் இறந்து கிடக்கும் புலியின் குறித்தும்

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உடற்கூறாய்வு மற்றும் மற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இறந்து கிடந்த இரண்டு புலிகளின் உடலில் இருந்தும் நகம், பல் போன்றவை வெட்டி எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.