• June 1, 2025
  • NewsEditor
  • 0

எந்த கால்வாயை முதலமைச்சர் பார்க்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்தினரும், திமுகவினரும் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வண்ணத்திரை கட்டி மறைத்தார்களோ, அதே கால்வாயை முதலமைச்சர் வந்து ஆய்வு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

மு.க.ஸ்டாலின்

திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணிக்கு மதுரை பெருங்குடியில் ரோடு ஷோவை தொடங்கி இரவு 10 மணிக்கு ஆரப்பாளையத்தில் முடித்தார்.

வருகின்ற வழியெங்கும் அந்தந்தப் பகுதி வட்டச்செயலாளர்கள், பகுதிச்செயலாளர்களால் அழைத்து வரப்பட்ட மக்கள மூலம் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவனியாபுரம், வெள்ளக்கல், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி. பழங்காநத்தம், வ.உ.சி.பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குருதியேட்டர், ஆரப்பாளையம் வழியாக சென்று மறைந்த மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை திறந்து வைத்தார்.

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சரின் ரோடு ஷோவால் தெற்குவாசல், வில்லாபுரம், அவனியாபுரம் பகுதிகளில் மாலையிலிருந்து சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

முதல்வரை வரவேற்க ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மதியத்திலிருந்து காத்திருந்த சில பெண்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது.

கோரிப்பாளையம் அருகிலுள்ள பந்தல்குடி கால்வாய் குப்பை கூளம் கொட்டப்பட்டு கழிவுநீர் கலந்து சாக்கடை கால்வாயாக துர் நாற்றம் வீசும் கால்வாயாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு மதுரையில் பெய்த சிறுமழையில் செல்லூர் உள்ளிட்ட பல பகுதிகள் நீண்ட நாட்கள் தண்ணீரில் மூழ்கியிருக்க காரணமே இந்த பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் செல்ல வழியில்லாமல தேங்கி நின்றதுதான். அப்போது இது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது. உடனே அமைச்சர்கள் வந்து அந்த கால்வாயை சீரமைக்க திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கினார்கள். ஆனால், அந்தப் பணியை முறையாகச் செய்யவில்லை. அதனால் மீண்டும் சாக்கடை கால்வாயாக காட்சியளித்து வருகிறது.

மு.க.ஸ்டாலின்

இந்த நிலையில்தான் மதுரை வரும் முதல்வர் ரோடு ஷோ முடித்து தங்கும் விடுதிக்கு இந்த வழியாக செல்வார் என்பதால், அவர் பார்வையில் படக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தினர் கால்வாயை சுற்றி அரை கிலோ கீட்டர் தூரத்துக்கு சாமியானாத் துணியால் மூடி மறைத்தனர். குஜராத் மாநிலத்தில் பிரதமர் நிகழ்ச்சியின் போது அங்கு குடிசைப்பகுதிகளை திரை போட்டு அம்மாநில அரசு மறைத்தது விமர்சனத்துக்குள்ளானது. அதை திமுகவினர் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்தனர். அதுபோலவே மதுரையிலும் நடந்ததால் இந்த சம்பவம் ஊடகங்களில் வைரலாகி எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அந்த கால்வாயை சுற்றி வசிக்கும் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் தாங்களே முன்வந்து அந்த திரையை அகற்றியதில் சிறு பரபரப்பும் ஏற்பட்டது.

பின்பு கலெக்டரின் உத்தரவின்பேரில் பாதி தூரத்துக்கு திரை அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு ரோட் ஷோ முடிந்த பின்பு முதலமைச்சர் பந்தல்குடி கால்வாயை பார்வையிட்டு அதன் பராமரிப்பு பணி குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டு அதன் பின்பு தங்கும் விடுதிக்கு சென்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *