
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பாக திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சிலையை அமைக்குமாறு கோரிக்கை வைத்த பாஷா சங்கம், மத்திய கலாச்சாரத் துறை, அலகாபாத் அருங்காட்சியகம் மற்றும் சென்னையின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன.
இதன் சிறப்பு விருந்தினர்களாக தமிழர்களான வாராணசி மண்டல ஆணையர் எஸ்.ராஜலிங்கம், பிரயாக்ராஜின் டிஐஜி டாக்டர்.என்.கொளஞ்சி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பிரயாக்ராஜ் நகர மேயர் கணேஷ் சந்திர கேசர்வாணி, அலகாபாத் அருங்காட்சியக இயக்குநர் முனைவர்.ராஜேஷ் பிரசாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். பாஷா சங்கத்தின் சார்பில் அதன் முன்னாள் நிர்வாகிகளான சி.எம்.பார்கவா மற்றும் ஆனந்த் கில்டியால் பங்கு பெறுகின்றனர். இந்து தமிழ் திசை சார்பில் அதன் டெல்லி மூத்த பத்திரிகையாளரான ஆர்.ஷபிமுன்னா உரையாற்றுகிறார். இவ்விழாவின் முக்கிய ஏற்பாட்டாளராக பாஷா சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் முனைவர்.எம்.கோவிந்தராஜன் உள்ளார்.