
போபால்: இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான நடவடிக்கைதான் ஆபரேஷன் சிந்தூர் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த நாளை முன்னிட்டு 'மகிளா சக்திகரன் மகா சம்மேளனம்' என்ற பெயரில் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாது: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நமது அப்பாவி மக்களை ரத்தம் மட்டும் சிந்த வைக்கவில்லை. அவர்கள் நமது கலாச்சாரம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் நமது சமூகத்தைப் பிரிக்க முயன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் பெண்கள் சக்திக்கு சவால் விடுத்தனர். இந்த சவாலே தீவிரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் அழிவாக மாறிவிட்டது. அவர்கள் தொடர்ந்த தாக்குதலால், தங்களுக்கு தாங்களே சாவுமணி அடித்துக் கொண்டனர்.