
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக் கணக்கான பக்தர்களும் இங்குள்ள கடலில் புனித நீராடிவிட்டு முருகப் பெருமானைத் தரிசனம் செய்வது வழக்கம்.
சுவாமி தரிசனத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கியும், கடல் அலையில் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர்.
பொதுவாகக் கடற்கரையிலிருந்து சில மைல் தூரத்தைக் கடந்துதான் மீன்கள், நண்டுகள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் வாழும்.
எப்போதாவதுதான் அலை அதிகம் வீசியோ, காலநிலை மாற்றத்தால் திசைமாறியோ அவை கரைக்கு வரும். அவை உயிரோடு இருந்தால் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.
சுறா போன்ற பெரிய மீன்கள் படகுகளில் மோதி இறந்தால் கரை ஒதுங்கும். இந்த நிலையில், காலநிலை மாற்றத்தினால் தற்போது தமிழ் மாதங்களில் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாள்களில் கடல் நீர் மட்டத்தில் மாறுபாடு ஏற்படுகிறது.
அந்நாள்களிலோ அல்லது அதன் பின்வரும் நாள்களிலோ, கடல் நீர் மட்டம் குறைந்து சில மீட்டர் தூரம் உள்வாங்கிக் காணப்பட்டும் வருகிறது.
அப்போது பாசி படர்ந்த பாறைகள் வெளியே தென்படும். அடுத்த சில நாள்களில் கடல் மீண்டும் இயல்புநிலைக்கு வந்துவிடும். இதே காலநிலை மாற்றத்தால் ஆழ்கடலில் காணப்படும் ஜெல்லி வகை மீன்கள், தற்போது கோயில் கடலின் கரையோரம் ஒதுங்கி வருகின்றன.
பார்ப்பதற்கு நுங்கு வடிவிலோ, கண்ணாடி நூலிழையைப் போலவோ, பாலித்தின் தாளைப் போலவோ இருப்பதால் பக்தர்கள் அதனைப் பஞ்சு எனவும், ஒருவகை பாசி எனவும் நினைத்தும் அதனைத் தொட்டு விடுகின்றனர்.

குழந்தைகள் அதனைக் கையில் எடுத்தும் விளையாடுகின்றனர். அதில் ஒரு சில வகை ஜெல்லி மீன்கள் மக்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது.
அந்த மீன்கள் கடித்த உடன் கை, கால்களில் தடிப்பு மற்றும் ஊறல் ஏற்பட்டுச் சிவப்பு நிறமாகி விடுகிறது. இதனால் பக்தர்கள் கடலில் குளிக்கும் போதும், கால் நனைக்கும் போதும் ஜெல்லி வகை மீன்களைக் கண்டால் அவற்றைக் கையால் தொட வேண்டாம் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
“கோடைக் காலமான பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் ஜெல்லி வகை மீன்கள் ஆழ்கடலிலிருந்து கரைக்கு ஒதுங்கும்.
தற்போது காலநிலை மாற்றத்தினால், அவ்வப்போது கடல் நீர் மட்டத்திலும் மாற்றம் ஏற்படுவதால் ஜெல்லி மீன்கள் அடிக்கடி கரையை ஒட்டிய பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.
கடலில் நீராடும் பக்தர்கள் ஜெல்லி மீன் பட்டு உடலில் எரிச்சலோ தடிப்போ ஏற்பட்டால் உடனடியாக உமிழ்நீரை ஜெல்லி மீன் கடித்த இடத்தில் தடவினாலோ அல்லது தேங்காய் எண்ணெய் தடவினாலோ சீராகி விடும்.

ஆனால், சில விஷ ஜெல்லி மீன்கள் கடிப்பதால் கட்டாயம் மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டும்” என்கின்றனர் மீன்வளத்துறை அதிகாரிகள்.
அத்துடன் ஜெல்லி மீன்களால் ஊறல், அலர்ஜி போன்றவை ஏற்பட்டால் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மருத்துவ உதவி மையத்தை அணுகி சிகிச்சை பெறலாம் எனத் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டும் இதே மாதங்களில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY