
ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட திமுக பொதுக்குழு, ஒருவழியாக ஜூன் 1-ம் தேதி மதுரையில் நடக்கவிருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகளை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி.மூர்த்தி கவனித்து வருகிறார்.
கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்காக மதுரையில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் செய்யப்பட்டுள்ளது.
பொதுக்குழுவுக்கு முதல்நாளே மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து மதுரை அரசு விருந்தினர் மளிகை வரை ரோடு ஷோவும் செய்ய உள்ளார்.
இந்நிலையில், கட்சிக்குள் சில அதிரடி மாற்றங்களைப் பொதுக்குழுவில் செய்ய உள்ளதாக நமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்சி சீனியர்களிடம் விசாரித்தோம்.
“2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு நடக்கும் இந்தப் பொதுக்குழு, திமுகவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அதன்படி, மத்திய பாஜக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்யும் தீர்மானங்கள் உட்பட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுகின்றன.
அதேபோல், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு கல்வியாளர் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி ஆகிய இரண்டு புது அணிகள் உருவாக்கப்பட உள்ளன.

தற்போது தி.மு.க-வில் அமைச்சர் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகிய ஐந்து துணை பொதுச் செயலாளர்கள் இருக்கின்றனர்.
அவர்களோடு ஒன்று அல்லது இரண்டு பேர் புதிதாகச் சேர்க்கப்பட உள்ளனர்.
மேலும், தலைமைக்கழகத்தின் அமைப்பில் மாற்றம் கொண்டு வரவும் இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடக்கின்றன.
அதன்படி, பொதுக்குழுவிலோ அல்லது பொதுக்குழு முடிந்தபிறகோ தலைமைக்கழகத்தில் சீனியர்களின் பதவி பறிக்கப்படவும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது” என்கின்றனர் விரிவாக.