• May 31, 2025
  • NewsEditor
  • 0

aவடக்கு காசா மாகாணத்தில் சுகாதார சேவைகள் வழங்கிவந்த கடைசி மருத்துவமனையான அல்-அவ்தா மருத்துவமனையை உடனடியாக மூடவேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சேவைகளை நிறுத்தியுள்ளதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டாக்டர் முகமது சல்ஹா, “வியாழனன்று மாலையில், ஜபாலியாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். இரண்டு வார முற்றுகைக்குப் பிறகும் இந்த கட்டாய வெளியேற்றம் நடைபெற்றுள்ளது என்பது மிக வருத்தமாக இருக்கிறது. தற்போது, வடக்கு காசாவில் எந்த மருத்துவமனையும் செயல்படவில்லை. நாங்கள் மருத்துவமனையை காலி செய்து வெளியேறாமல் இருந்தால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் மருத்துவமனையின் உள்ளே நுழைந்து, உள்ளே இருப்பவர்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர் மற்றும் மருத்துவமனையின் மீது குண்டு வீசுவதாகவும் அச்சுறுத்தினர். நாங்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் உயிரை பாதுகாப்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம்.

வியாழனன்று காலை 9:00 மணி முதல், மருத்துவமனை மீது ஏராளமான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் நண்பகல் 1:00 மணியளவில், தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட இஸ்ரேலியப் படைகள், மருத்துவமனையிலிருந்து வெளியேறுமாறு என்னை வற்புறுத்தினர். சுகாதார பராமரிப்பு தேவைப்படும் நோயாளிகள் இருந்ததால், மருத்துவமனையிலிருந்து வெளியேற நான் ஆரம்பத்தில் மறுத்துவிட்டேன். மேலும், எங்கள் ஊழியர்களில் 10 பேருடன் நான் தங்கிக்கொண்டு மற்றவர்களை வெளியேற்ற முன்வந்தேன்.

ஆனால், அதற்கு இஸ்ரேல் இராணுவம் மறுத்துவிட்டது. ஏழு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின், சுமார் இரவு 8:30 மணிக்கு மருத்துவமனை வெளியேற்றம் நடந்தது. சாலைகள் முற்றிலுமாக சீரற்ற நிலையில் இருப்பதால், மருத்துவமனையிலிருந்து வெகு தொலைவில் (300 மீட்டருக்கும் மேல்) நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களுக்கு ஊழியர்கள் நோயாளிகளை தூக்கிச் சென்றனர் மற்றும் நோயாளிகள் காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்” என நிலவரத்தை பகிர்ந்தார்.

மருத்துவமனை வெளியேற்றம் குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “அல்-அவ்தா மருத்துவமனை மூடப்பட்டதால், வடக்கு காசாவில் மருத்துவமனை எதுவும் செயல்படவில்லை. இது அங்குள்ள மக்களின் முக்கியமான உயிர்நாடியைத் துண்டித்துவிட்டது. பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மருத்துவமனைகள் ஒருபோதும் தாக்கப்படவோ அல்லது இராணுவமயமாக்கப்படவோ கூடாது” என கூறினார்.

போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த மருத்துவமனை வெளியேற்றம் நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் கையொப்பமிட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ள ‘அமெரிக்க திட்டத்தை’ முழுமையாக மதிப்பாய்வு செய்து வருவதாக ஹமாஸ் கூறுகிறது. வெள்ளியன்று இதுகுறித்து பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தம் மிக நெருக்கமானது என நம்புவதாகக் கூறினார். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இஸ்ரேலின் உறுதிப்பாடு உள்ளிட்ட அதன் முக்கிய கோரிக்கைகளை இத்திட்டம் பூர்த்தி செய்யவில்லை என்று ஹமாஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து கருத்து பகிர்ந்த காஸாவின் ஹமாஸ் சுகாதார அமைச்சகம், “சண்டையில் 60 நாள் இடைநிறுத்தம் இருக்கும். முதல் வாரத்தில், 28 பணயக்கைதிகளை உயிரோடும், இறந்த நிலையிலும் ஹமாஸ் விடுவிக்கும். நிரந்தர போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபின், எஞ்சியுள்ள 30 பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். 1000க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நிறுவனங்கள் வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும்” என தெரிவித்தது.

எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே காசா மீது தாக்குதல் நடத்துவதாக தெரிவித்தது இஸ்ரேல். பணயக்கைதிகளில் குறைந்தபட்சம் 20 பேர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் உதவிகளைத் திருடியதாக இஸ்ரேல் குற்றம் சா

ட்டியுள்ள நிலையில், ஹமாஸ் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *