
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் விளக்கிவருகிறது. அதர் தொடராக வியாழக்கிழமை கொலம்பியா சென்ற அந்தக் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “இந்தியாவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானில் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் அறிக்கை ஏமாற்றத்தை அளித்தது” என்றார். அதைத் தொடர்ந்து இந்தியத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட முந்தைய அறிக்கையை கொலம்பியா அதிகாரபூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.
இந்தியாவின் அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்தித்த பிறகு, கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ, “ எங்களுக்குக் கிடைத்த விளக்கம், அங்கு இருக்கும் உண்மையான நிலை, காஷ்மீரில் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது எங்களுக்குக் கிடைத்த விரிவான தகவல்களின் மூலம், பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, எங்களின் கவலை தெரிவித்த அறிக்கையை திரும்பப் பெறுகிறோம். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை தூதுக்குழு முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது.” என்றார்.