• May 31, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: ஒரு வழியாக  நம்மைவிட்டுப் போய்விட்டது என நினைக்கவைத்த கொரோனா, மீண்டும் பரவத் தொடங்கியிருக்கிறது. ஒரே நேரத்தில் நான்கு வேரியன்ட்டுகள் பரவுவதாகவெல்லாம் சொல்கிறார்கள். மக்கள் மாஸ்க் அணிவதையே மறந்துவிட்டார்கள். உயிரிழப்புகள் குறித்தும் கேள்விப்படுகிறோம்.  இப்போது பரவும் கொரோனா வீரியம் மிக்கதாக மாறுமா… மீண்டும் லாக்டௌன் அறிவிக்கப்படும் அளவுக்கு ஆபத்தானதாக மாறுமா?

பதில் சொல்கிறார் ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும்,  தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன்.

ஒன்ஹெல்த் டிரஸ்ட்டின் தலைவரும், தொற்றுநோயியல் துறை நிபுணருமான ரமணன் லட்சுமி நாராயணன்.

ஒரே நேரத்தில் பல வைரஸ் வகைகள் (variants) பரவுவது அசாதாரணமான நிகழ்வு அல்ல. உதாரணத்துக்கு, ஃப்ளூ வைரஸையே சொல்லலாம். அது பல வைரஸ் வேரியன்ட்டுகளின் கலவையாகவும், ஒவ்வோர் ஆண்டும் மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்கும்.

வைரஸ் கிருமி ஏற்படுத்தும் நோயின் தீவிரத்தைக் கணிப்பது கடினம். ஆனால், பொதுவாக நீண்டகாலமாக மனிதர்களுடன் இருக்கும் வைரஸ்கள், காலப்போக்கில் தம் தீவிரத்தன்மையைக் குறைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும், இதை உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த நோய்ப்பரவலுக்கும் எளிதில் இலக்காகிறவர்கள் முதியவர்கள்தாம்.

அந்த வகையில், இப்போது பரவும் கொரோனாவிலும் அந்த ரிஸ்க் இருக்கிறது. கூடியவரையில் அவர்கள் கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத தருணங்களில், மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லும்போதும், பேருந்து, ரயில் பயணங்களின் போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது அவசியம். இது அவர்களை பயமுறுத்துவதற்காகச் சொல்லப்படுகிற அட்வைஸ் அல்ல.

ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும் பழக்கமாக இருக்கிறது.

ஜப்பான் போன்ற நாடுகளில், வயதானவர்கள் முகக்கவசம் அணிவது பொதுவாகவே பின்பற்றப்படும்  வழக்கமாக இருக்கிறது. இது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், மற்றவர்கள் மீதான அக்கறையினாலும் பின்பற்றப்படுகிறது. எனவே, இப்போது பரவும் கொரோனா குறித்து அச்சம் கொள்வதற்கு பதில், எச்சரிக்கையுடன் இருப்பதுதான் சரியானது.

வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், இணை நோய்கள் (நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை) உள்ளவர்கள் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த செய்திகள், ஆதாரமற்றவை. தடுப்பூசி பாதுகாப்பளிக்குமே தவிர, ஆபத்தை ஏற்படுத்தாது. இப்போது பரவும் வைரஸ், ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்தையே கொண்டதாகத் தெரிகிறது. எனவே, லாக்டௌன் போன்ற நடவடிக்கைகள் தேவைப்படாது. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *