
புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய லஷ்கர் கமாண்டர் சைஃபுல்லா கசூரி லாகூரில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கர்- இ- தொய்பா கமாண்டர் சைஃபுல்லா கசூரி என குற்றம் சாட்டப்பட்டது.
லஷ்கர் அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத் உத்தரவின் பேரில் கசூரி, ஹபிஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் அமைப்பின் ஷேக் சாஜத் ஆகியோர் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளை பஹல்காமுக்கு அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால், பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்க முதலில் கசூரி மறுத்தார்.