• May 30, 2025
  • NewsEditor
  • 0

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்ட சமையல் பொருட்களுடன் பீடி சுற்றும் இலைகளும் மூடை மூடையாக கடத்தப்படுகின்றன. இலங்கையில் நிலவும் பொருளாதார மந்த நிலையில் அங்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் இவற்றை இந்தியாவில் இருந்து கள்ளத்தனமாக கடத்தி சென்று அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதில் கடத்தல் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தங்கச்சிமடம் அய்யந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஏலக்காய் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்ற புலனாய்வுத்துறையினரும், தங்கச்சிமடம் தனிப்பிரிவு போலீஸாரும் தங்கச்சிமடம் அய்யந்தோப்பு பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டின் பின்புறம் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 7 மூடைகள் சிக்கியது.

ஏலக்காய் மூடைகள்

அந்த மூடைகளை பிரித்து பார்த்த போது ஒவ்வொரு மூடையிலும் தலா 25 கிலோ எடை கொண்ட 175 கிலோ ஏலக்காய் இருந்தது. இவற்றின் இலங்கை மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தங்கச்சிமடம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். மேலும் இவற்றை புதைத்து வைத்திருந்த அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது மகன் இனியன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். சுரேஷ் மீது தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் காவல் நிலையங்களில் பாஸ்போர்ட் ஆக்ட் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் மூடைகள்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *