
சென்னை: பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் உயர் கல்வியை திமுக சீரழித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உயர் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே இப்படிப்பட்ட உயர் கல்வி உன்னத நிலையை அடைய வேண்டுமென்றால் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட வேண்டும், கட்டமைப்பு வசதிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத அவல நிலை நிலவுகிறது.