
திருநெல்வேலி: “பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், குறிப்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதலுக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கூறும்போது, “2024 மக்களவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தினேன். அதேநேரம் அன்புமணியும், சவுமியாவும், ‘பாஜகவுடன் கூட்டணி என்பதை ஏற்க வேண்டும்’ என்று எனது கால்களை பிடித்துக் கொண்டு அழுதனர். மறுநாள் காலை, தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை வந்துவிட்டார். எனக்கு தெரியாமல் பெரிய விருந்து வைக்கப்பட்டது. பாஜக உடனான கூட்டணி ஏற்பாடுகளை சவுமியா முன்கூட்டியே செய்துவிட்டார். நான் கூறியபடி அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், 3 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருக்கும். சின்னமும் கிடைத்திருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.