
கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வழங்கியிருக்கும் தகவலில், மேற்கு பிரான்சில் மருத்துவராக 25 ஆண்டுகளாகப் பணியாற்றியவர் ஜோயல் லு ஸ்கௌர்னெக். இவரிடம் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 300 பேரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியிருக்கிறார்.
சிலருக்கு மயக்க மருந்து கொடுத்தும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த வழக்கு பிரான்சை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின் போது, `என் செயல் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வேதனையை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன். அதனால், நான் மேல் முறையீடு செய்யக் கோரப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் செய்ய விரும்புகிறேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “உங்கள் செயல்கள் மருத்துவ உலகில் ஒரு கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. உங்கள் சக ஊழியர்களான மருத்துவ அதிகாரிகளால்கூட உங்கள் செயல்களைத் தடுக்க முடியவில்லை என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எனவே, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.