
பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுவனர் ராமதாஸுக்கு, தலைவர் அன்புமணிக்கும் கடந்த சில மாதங்களாகவே, நேரிடையாகவும், மறைமுகமாகவும் வார்த்தை மோதல்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.
இத்தகைய சூழலில், சோழிங்கநல்லூரில் பா.ம.க மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அன்புமணி, “இன்று காலையில் ஒரு லெட்டர் நம்முடைய பொருளாளர் திலகபாமாவுக்கு மாற்றாக யாரையாவது அறிவிப்போம் என்று வந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் திலகபாமா பொருளாளராக நீடிப்பார் என்று நான் ஒரு லெட்டர் வெளியிட்டேன்.
அவரை எடுப்பதற்கு உங்களுக்கும் அதிகாரம் இல்லை. எனக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழுவுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது.
பொதுக்குழு நினைத்தால்தான் எங்களை நியமனம் செய்ய முடியும், எடுக்க முடியும். வேறு யாராலும் அதைப் பண்ண முடியாது. அதுதான் நம்முடைய கட்சியின் விதி.
இந்த விதிகள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கிறது. என்னுடைய கடிதம்தான் செல்லும்.
என்னைக் கட்சித் தலைவராக நீங்கள் தேர்வு செய்த நாளிலிருந்து மன உளைச்சல்தான். நேற்றுதான் விடுதலை கிடைத்தது.
எந்தத் தடைகள் வந்தாலும், நாம் உடைத்து முன்னேறுவோம். அதேநேரத்தில் நம்முடைய சமூக நீதிப் போராளி ராமதாஸின் கொள்கைகளை நாம் கடைப்பிடிப்போம்.
அடுத்து வருகின்ற தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும்.
என் வாழ்க்கையில் எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன். ஆனாலும், இது அத்தனையும் இனி மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

இந்த உலகத்தில் நான் மிகவும் நேசிப்பது என் அம்மாவைத்தான். அதேபோன்று அவர் மிகவும் நேசிப்பதும் என்னைத்தான்.
எங்க அம்மா மேல ஒரு துரும்பைக் கூடப் படவிடமாட்டேன், இதுவரைக்கும் விட்டதும் இல்லை. ஆனால், இப்போது அந்த வார்த்தை மட்டும் என்னால் தாங்க முடியவில்லை. இதுவும் கடந்து போகும்.
பொறுப்பை மாற்றிவிட்டார்கள், அப்படிப் பண்ணிவிட்டார்கள் என்று யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்த பத்து நிமிடத்தில் நீங்கள்தான் தொடர்வீர்கள் என்று கடிதம் வரும்.

எனக்கு இப்போது ஒரு நல்ல டீம் அமைஞ்சிருக்கு. இதை உருவாக்குவதற்கு மூன்று, நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இந்த டீமை கெடுப்பதற்கு, குழப்புவதற்குச் சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன.
ஆனால், ஒன்றும் ஆகப்போவது கிடையாது. யாரிடமும் நீங்கள் வம்புக்குப் போக வேண்டாம். நம் கட்சியை அடுத்த கட்டத்துக்கு நாம் கொண்டுசெல்ல வேண்டும்.
அதற்கு எவ்வளவோ திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. இப்போது அதைச் செயல்படுத்துவதற்கு எனக்குச் சுதந்திரமும் இருக்கிறது.” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY