
‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டிலை பலருக்கும் ஃபேவரைட்டான திவினேஷ் தட்டிச் சென்றிருக்கிறார்.
திவினேஷ், சரிகமப மேடையிலேயே அதிகளவில் எதுவும் பேசமாட்டார். அப்பாவித்தனத்துடன், எளிமையான அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை வரிப் பதில்தான் கொடுப்பார்.
அதுமட்டுமின்றி, இன்றைய 2கே கிட்ஸிலிருந்து திவினேஷ் முற்றிலுமாக வேறுபட்டவர். ஆம், அவர் பெரும்பாலும் பழைய பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார்.
நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் 80ஸ் பாடல்களைத்தான் பாடினார். டைட்டில் அடித்திருக்கும் திவினேஷுக்கு வாழ்த்துகளைச் சொல்லிச் சந்தித்துப் பேசினோம்.
திவினேஷ் பேசுகையில், “முதன்முதலில் எனக்கு சரிகமப நிகழ்ச்சியைக் கற்றுக் கொடுத்ததே தாத்தாதான். எனக்குத் தாத்தாவை ரொம்ப பிடிக்கும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நல்ல பாடல்களைப் பாடி மேலே வரணும்னு தாத்தா சொல்வார். அதே மாதிரி அவரும் எனக்கு நிறையப் பாடல்கள் கற்றுக் கொடுத்தார்.
தாத்தா வீட்டில் பாடுற பாடல்களைக் கேட்டு நான் பழகி, அந்தப் பாடல்களை என்னுடைய அப்பா, அம்மாவிடம் பாடிக் காமிச்சேன்.
அப்போ நான் பாடுறதைப் பார்த்து அம்மாதான் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் இவனைக் கலந்துகொள்ள வைக்கலாம்னு சொன்னாங்க.

அப்படியே அம்மாதான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வேலைகளையும் பார்த்தாங்க. ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கு வந்ததுக்குப் பிறகு என்னுடைய பள்ளி நண்பர்களும் என்னைப் பாராட்டினாங்க.
நிகழ்ச்சியுடைய ஃபைனல்ஸில் நான்தான் வெற்றியாளர்னு சொன்னபோது நான் நம்பவே இல்லை. முதலில், நானும் ஹேமித்ரா அக்காதான் வின்னர்னு நினைச்சேன். அப்புறம், அம்மா சொன்னதுக்குப் பிறகுதான் நான் வின்னர்னு தெரிஞ்சது.
இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஜெயிச்சதன் மூலமாக எனக்கு 10 லட்ச ரூபாய் பணம் கிடைச்சிருக்கு. அதை வச்சு என்னுடைய குடும்பக் கடன்களை நான் அடைக்கப்போறேன்.
இந்தப் பணத்தை வச்சு கடன் அடைக்கணும்னு அம்மா சொன்னது கிடையாது. தினமும் கடனை நினைச்சு அம்மா அழுவாங்க. அதைப் பார்த்த எனக்கு இந்தப் பணத்தை வச்சு கடனை அடைச்சிடணும்னு தோணிச்சு” என்றவர், ‘சரிகமப’ நிகழ்ச்சியிலேயே தன்னுடைய தந்தைக்குச் சொந்தமாக ஒரு பால் வேன் வாங்கிக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அவருடைய கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது. திவினேஷின் தந்தைக்குப் பாடகர் ஶ்ரீனிவாஸ் ஒரு வண்டியை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அது தொடர்பாக அவர், “அப்பா இப்படியான தருணத்தில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கார். ஶ்ரீனிவாஸ் சாருமே, ‘உங்க அப்பா நல்லா சம்பாதிக்கணும்’னு சொன்னாரு. ஃபைனல்ஸில் சிவகார்த்திகேயன் சார்கூட போட்டோ எடுத்துக்கிட்டேன்.
முக்கியமா, நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக மேடையில் பாடினோம். ‘இந்த மாதிரியான பாடல்களைத் தொடர்ந்து பாடு, வருங்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவ’னு என்கிட்ட சிவகார்த்திகேயன் சார் சொன்னாரு” என்றார்.
சமீபத்தில் ‘சரிகமப’ நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள் இளையராஜாவைச் சந்தித்திருந்தனர். அந்தச் சந்திப்பில் இளையராஜா ‘சரிகமப’ சிறுவர்களிடம் உரையாடி மகிழ்ந்திருக்கிறார்.
இந்தச் சந்திப்பு குறித்து திவினேஷ், “எனக்கு இளையராஜா சாரை ரொம்ப பிடிக்கும். அவருடைய ‘போட்டு வைத்த காதல் திட்டம்’, ‘மலையோரம் வீசும் காற்று’, ‘எங்கே செல்லும் இந்தப் பாதை’ ஆகிய பாடல்களை நானும் தாத்தாவும் தொடர்ந்து கேட்போம்.
நான் இப்போ வருகிற பாடல்களைப் பெரிதாகக் கேட்கிறது இல்லை. எனக்குப் பழைய பாடல்கள்தான் ரொம்ப பிடிக்கும்.

நிகழ்ச்சியில் ஒரு சுற்றுக்குச் சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.வி. சாரோட குடும்பத்தினர் வந்திருந்தாங்க. அவங்க சாரோட ஒரு பதக்கமாலையை எனக்குக் கொடுத்திருந்தாங்க.
அந்த மாலையை நான் பத்திரமாகப் பூட்டி பீரோவில் வச்சிருக்கேன்” என்றவர், “எனக்குப் பெரியவனாகி நடிக்கணும்னு ரொம்ப ஆசை இருக்கு. நிகழ்ச்சியில் எனக்கு ஜட்ஜஸ் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருக்காங்க. எனக்கு கிஃப்ட் கொடுத்திருக்காங்க.
அவங்கதான் எனக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்தாங்க. நான் ஆசைப்பட்ட ரிமோட் காரையும் அவங்க வாங்கிக் கொடுத்தாங்க” என மழலை ததும்பும் அப்பாவித்தனத்துடன் முடித்துக் கொண்டார்.
முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…