• May 30, 2025
  • NewsEditor
  • 0

நிதி நெருக்கடி காரணமாக, $3.7 பில்லியன் பட்ஜெட்டை 20% குறைத்து, சுமார் 6,900 பேரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிதியில், கிட்டத்தட்ட கால் பங்கை வழங்கும் அமெரிக்காவால் தூண்டப்பட்ட நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த உத்தரவை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலகம், ஜூன் 13 ஆம் தேதிக்குள் பணிநீக்கம் குறித்து கோடிட்டுக் காட்டுமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பெருமளவு வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவரும் நிலையில், இது ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உதவிகளைக் கடுமையாக பாதித்து வருகிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட $1.5 பில்லியன் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டில் செலுத்த வேண்டிய பங்களிப்புகளை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘நிதி நெருக்கடியால் ஐ. நா அலுவலகத்தில் பணிபுரிவோரை பணியிலிருந்து நீக்கும் வாய்ப்புள்ளது’ என்ற குறிப்பை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டாளரான சந்திரமௌலி ராமநாதன், அமெரிக்காவின் குறைந்த நிதி பங்களிப்பை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட ஒரு பரந்த மதிப்பாய்வினை வடிவமைத்து, அதற்கு “UN80” என பெயரிட்டுள்ளதாக பகிர்ந்தார்.

மேலும் பேசிய ராமநாதன், “21ஆம் நூற்றாண்டின் பன்முகத்தன்மையை ஆதரித்து, மனித துன்பங்களைக் குறைத்து, அனைவருக்கும் சிறந்த வாழ்வு மற்றும் எதிர்காலத்தை வழங்க ஐக்கிய நாடுகள் சபை பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு லட்சிய முயற்சி இது. காலக்கெடு அங்கீகரிக்கப்பட்டுள்ளோரின் கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பை நான் நம்புகிறேன்” என கூறினார். இந்த பணிநீக்கம் அடுத்த பட்ஜெட் சுழற்சியின் தொடக்கமான ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

ஐ.நா. தூதர்களுக்கு நடத்தப்பட்ட பொது விளக்கக் கூட்டங்களில் பேசிய பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், “முக்கிய துறைகளை ஒன்றிணைத்து, உலகம் முழுவதும் உள்ள வளங்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கான முயற்சியை பரிசீலித்து வருகிறோம். ஐ.நா. சபையிலுள்ள சில நிறுவனங்களை ஒருங்கிணைத்து மற்றவற்றைக் குறைக்க உள்ளோம். ஊழியர்களை மலிவான செலவுடைய நகரங்களுக்கு மாற்றலாம். மேலும், தேவையற்ற அதிகாரத்துவத்தை அகற்றலாம். இது ஆபத்து நிறைந்த காலமாக இருப்பினும், மிகுந்த கடமை நிறைந்த காலமும்கூட. எந்தத் தவறும் செய்யாதீர்கள். சங்கடமான மற்றும் கடினமான முடிவுகள் கண்முன்னால் உள்ளன. அவற்றைப் புறக்கணிப்பது, கேனை சாலையில் உதைப்பதுபோல எளிதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கலாம். ஆனால், அந்த சாலை முட்டுச்சந்தாக இருப்பதை கவனத்தில் கொள்ளவும்” என கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் இது குறித்து பேசிய மனிதாபிமான விவகாரங்களின் ஐக்கிய நாடுகள் ஒருங்கிணைப்பு அலுவலக தலைவரான டாம் பிளெட்சர், “அமெரிக்க பட்ஜெட் நிறுத்திவைப்பின் காரணத்தால் ஏற்பட்ட 58 மில்லியன் டாலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவுள்ளோம். எனவே, நிறுவனம் அதன் பணியாளர்களில் 20 சதவீதத்தை கட்டாயமாக குறைக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

இது குறித்து பேசிய சர்வதேச நெருக்கடி குழுவின் ஐ.நா இயக்குநர் ரிச்சர்ட் கோவன், “இந்த நிதி நிறுத்திவைப்பு ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை பாதிக்குமா என தெளிவாக தெரியவில்லை” எனக் கூறினார்.

அமெரிக்கா தனது நிதியை செலுத்தத் தவறியது ஐ.நா.விற்கு பணப்புழக்க நெருக்கடியை உருவாக்கியுள்ளது மற்றும் சீனா மீண்டும் மீண்டும் தாமதமாக பணம் செலுத்துவதால், நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இணைந்து, ஐ.நா.வின் முக்கிய நிதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களிப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *