
மதுரை: நீட் தேர்வு குறித்த தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பேச்சுக்கு ஏபிவிபி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அந்த அமைப்பின் தென் தமிழக இணை செயலாளர் ஜெ.டி.விஜயராகவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளி மாணவர்கள் மீது அக்கறையாக இருந்து அறிவுரை வழங்குவதாக கூறிக்கொண்டு தனது அரசியல் செல்வாக்கை உயர்த்தும் நோக்கத்தில் மாணவர்களிடம் தவறான கருத்துகளை தெரிவிக்கும் நடிகர் விஜய்யை ஏபிவிபி கண்டிக்கிறது.
நடிகர் விஜய் அரசியல் சூழ்ச்சி தெரியாத பள்ளி மாணவர்களிடம் நீட் தேர்வு குறித்து எதிர்மறை எண்ணங்களை புகுத்தி, ஒன்றிய அரசு என அரசியல் பேசி மாணவர்களிடம் வன்முறையை தூண்டி வருகிறார். தமிழகத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் அடைந்து, அதிகப்படியான ஏழை மாணவர்கள் அதிகளவில் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கடின முயற்சி எடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.