
சென்னை: உற்பத்தி துறையில் உலகளவில் சாதனைகளைப் படைத்து நாட்டுக்கே தமிழ்நாடு வழிகாட்டுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் வெற்றிப் பாடங்களைப் பின்பற்றினால், இந்தியா விரைவில் உற்பத்தித் துறையில் உலகளாவிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “2014-ல் ‘Make in India’ திட்டம் தொடங்கப்பட்டபோது, 2025-க்குள் உற்பத்தித் துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 25% ஆக உயர்த்துவதை இலக்காக நிர்ணயம் செய்தது. ஆனால் தற்போது வரை 16% சதவீதம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 25% உற்பத்தித் துறையிலிருந்து பெற்று நாட்டிற்கே வழிகாட்டும் மாநிலமாக உள்ளது.