
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “மதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா அம்மையார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தனது சகோதரி மீது அளவற்ற பாசம் வைத்திருந்தவர் அண்ணன் வைகோ ஆவார். தன்னுடைய உடன்பிறந்த சகோதரியை இழந்து தவிக்கும் வைகோவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.