• May 30, 2025
  • NewsEditor
  • 0

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புக்காக உளவு பார்த்ததாகக் கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளரும் தற்போதைய அரசு ஊழியருமான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் உள்ள அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சகூர் கான் மங்களியா என்பவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது சிஐடி மற்றும் உளவுத்துறை சிறப்புப் பிரிவுகளால் கைதுசெய்யப்பட்டார். அவர் தற்போது மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷேல் முகமது – ராகுல் காந்தி

சமீப காலமாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடனும், ஐ.எஸ்.ஐ அமைப்புடனும் தொடர்புகள் வைத்திருந்ததாகச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, உளவுத்துறை அமைப்புகள் அவரது நடமாட்டத்தைப் பின்தொடர்ந்தன.

முக்கிய தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல் கண்காணிப்பாளர் சுதிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

கான், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷேல் முகமதுவின் தனிப்பட்ட உதவியாளராக முன்பு பணியாற்றியுள்ளார். அவர்கள் இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பா.ஜ.க ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “பாகிஸ்தான் தொடர்புகள் காங்கிரஸ் கட்சியின் ரத்தத்தில் ஊறியுள்ளது” எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கானின் மொபைல் போனில் பல தெரியாத பாகிஸ்தான் எண்கள் இருப்பதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து கான் எந்தவித விளக்கமும் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும், விசாரணையின்போது கான் கடந்த காலத்தில் 6–7 முறை பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் மொபைல் சாதனத்தில் ராணுவம் தொடர்பான காணொளிகள் போன்றவைக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், சில முக்கிய பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அவருடைய இரண்டு வங்கிக் கணக்குகள் உட்பட நிதி விவரங்களும் தற்போது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது, மேலதிக விசாரணைக்காக கான் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *