• May 30, 2025
  • NewsEditor
  • 0

தமிழ்ச் சமூகத்தின் வரலாறென்பது காலத்தில் பின்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது.

தோண்டத் தோண்ட, நில அகழ்வுகள் உலகை வியக்க வைக்கும் நாகரிகத்துக்கு சான்றாதங்களை அள்ளி அள்ளித் தந்துகொண்டிருக்கின்றன. ஆயினும் தமிழர்கள் மீதிருக்கும் குறை, வரலாற்றைச் சேகரிப்பதிலும் பாதுகாப்பதிலும் ஆர்வமற்றவர்கள் என்பதே.

இலக்கியங்கள் முதல் அபூர்வ மருத்துவங்கள் வரை புலவர்களும் சித்தர்களும் எழுதி வைத்திருந்த ஓலைச்சுவடிகள் பெரும்பாலாவற்றை கரையானுக்குத் தின்னத் தந்த சமூகம் நம்முடையது. பலவற்றை வெளிநாட்டுக்காரர்கள் அபகரித்து விட்டார்கள்.

அச்சுப் பிரதிகளுக்கு அப்படியான அவலம் நேர்ந்துவிடாதவாறு அரிய வரலாற்றாதாரங்களை பாதுகாத்து பத்திரப்படுத்தும் அற்புதமானதொரு பணியைச் செய்து வருகிறது சென்னை, தரமணியில் இருக்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.

ரோஜா முத்தையா

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். அந்த ரோஜா முத்தையாவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொள்ள,  ‘ரோஜா முத்தையா’ ஆனார்.

எல்லோரும் பணம், காசு தேடிப் பரிதவித்துக்கொண்டிருந்த காலத்தில்,  முத்தையா, வீண் என்று தூக்கிப்போட்ட நூல்களையும் ஆவணங்களையும் தேடித்தேடி சேகரித்தார்.

1992-ல் அவர் காலமானபோது, 50,000 நூல்களும் துண்டுப் பிரசுரங்கள், அறிக்கைகள், திரைப்பட, நாடக போஸ்டர்கள் போன்ற 50,000 ஆவணங்களும் அவரின் சேகரிப்பில் இருந்தன.
 

இதன் முக்கியத்துவம் உணர்ந்த சிகாகோ பல்கலைக்கழகம் அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியது. குடும்பத்தாரிடம் இருந்து வாங்கி சென்னைக்குக் கொண்டு வந்தது.  

ப.சங்கரலிங்கம், கிரியா ராமகிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன் போன்றோர் நடத்திய  ‘மொழி அறக்கட்டளை’யிடம் அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியது.

2004-ல் சுந்தர் கணேசன், தியோடர் பாஸ்கரன், பேராசிரியர் எம்.ஏ. கலாம் ஆகியோர் இணைந்து ‘ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலைய அறக்கட்டளை’யைத் தொடங்கி, இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

நூலகம்
நூலகம்

தரமணியில் தமிழக அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தை நீண்டகாலக் குத்தகைக்குப பெற்று  நூலகம் விரிவு செய்யப்பட்டது.
தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய மு.அருணாசலம், முன்னாள் துணைவேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், ஐராவதம் மகாதேவன், கவிஞரும் மொழியியல் அறிஞருமான ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்ட பல ஆளுமைகளின் நூல் சேகரிப்புகளும் இந்த நூலகத்துக்கு வர இதன் தளம் அடர்த்தியானது.

தற்போது, 5 லட்சம் பழைய பதிப்பு நூல்கள், சமூக ஆவணங்கள், இதழ்கள் இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. “Optical character recognition தொழில்நுட்பத்தின் வழியாக அரிய நூல்களை அதிநவீன தொழில்நுட்பத்தின் வழி டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் இங்கே நடக்கின்றன.

எந்த நூலையும் நொடியில் தேடியெடுக்கும் வகையில் ஒவ்வொரு புத்தகமும் சர்வதேச தரத்தில் கேட்லாக் செய்யப்படுகிறது. நூல்களை பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டம் ஒன்றும் இங்கே செயல்படுத்தப்படுகிறது.  காகிதங்களின் அமிலத்தன்மையை நீக்கி ஜப்பானிய டிஷ்யூ என்ற காகிதத்தை ஒட்டி வலுப்படுத்தி ரீபைண்ட் செய்து பாதுகாக்கிறோம்.  இதுவரை 5000 நூல்கள் இந்த முறையில் பாதுக்கப்பட்டுள்ளன.

இவைதவிர, தமிழின் எல்லா செவ்வியல் இலக்கியங்களின் எல்லாப் பதிப்புகளும் நுண்படச் சுருளில் பதிவு செய்யப்பட்டு, நூலகத்தின் ஒரு பகுதியில் 18 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் பாதுகாக்கப்படுகின்றன. எந்தப் பேரிடரும், இயற்கைச் சீற்றமும் இதை அழிக்க முடியாது. அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கும் வகையில் நம் அறிவுச் செல்வங்களை பாதுகாக்கும் முயற்சி இது.

ஏராளமான சொற்பொழிவுத் திட்டங்கள், ஆய்வுத் திட்டங்கள், பயிற்சிகள் இங்கே வழங்கப்படுகின்றன. சிந்துவெளி ஆராய்ச்சிக்கென்று ஒரு மையமும் பண்பாடு மற்றும் நவீனத்துவத்தின் சமகால கூறுகளைஆராய்வதற்காக பொதுவியல் ஆய்வு மையம் ஒன்றும் இங்கு இயங்குகிறது…” என்கிறார் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன். தற்போது மேலும் ஒரு அரிய பணியைக் கையில் எடுத்திருக்கிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்.

தமிழ் அறிவு வளாகம்
தமிழ் அறிவு வளாகம்

அனைத்துச் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து, தமிழ் அறிவு வளாகம் ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் பிரமாண்டமான நூலகம், தமிழ் அச்சுப்பயன்பாட்டின் வரலாற்றை விவரிக்கும் வகையிலும் சிந்துவெளி ஆராய்ச்சிகளை புரிந்துகொள்ளும் வகையிலும் இரண்டு அருங்காட்சியகங்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய ஆவணக் காப்பகம் ஆகியவை உருவாக்கப்படவுள்ளன.

இந்த அறிவு வளாகம் ஒரு பண்பாட்டு சுற்றுலா மையமாக இருக்கும். இதற்கென தமிழக அரசு 13 கிரௌண்ட் நிலம் வழங்கியுள்ளது. ஏப்ரலில் கட்டுமானப் பணி தொடங்கவுள்ளது.

ரூ.35 கோடி செலவில் 40,000 சதுர அடியில் உருவாகவுள்ள இந்த அறிவு வளாகத்தில் அரிய தமிழ் நூல்களைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பதுடன், தமிழ் அச்சுப் பண்பாட்டு அருங்காட்சியகம்,  சிந்துவெளி பொருள்விளக்கக் கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.

விகடன் வாசகர்கள் தங்கள் பங்களிப்பை வழங்கி இந்த அரும்பணியில் பங்கேற்கலாம். நிதி வழங்க விரும்புபவர்கள்,

Roja Muthiah Research Library Trust-Building Fund,

Current A/C No. 42625211182,

State Bank of India, Tidel Park Branch,

Branch Code: 04285, IFS Code: SBIN0004285 எ

ன்ற வங்கிக்கணக்கில் தங்கள் கொடையைச் செலுத்தலாம். வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்த விரும்புபவர்கள் 98944 53334 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
https://rmrl.in/en/donation என்ற லிங்கை கிளிக் செய்தும் உங்கள் நன்கொடையைச் செலுத்தலாம். 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *